Skip to main content

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Minister, Collector pays tribute to fishermen

 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 600 இந்திய (தமிழக) மீனவர்களைக் கொன்று குவித்த இலங்கை கடற்படை இன்னும் அடங்கவில்லை. இப்போது 4 மீனவர்கள் சென்ற படகை இடித்து மூழ்கடித்துக் கொன்றிருக்கிறார்கள். இப்படி அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் தான் மேலும் மேலும் தமிழக மீனவர்களை அச்சமின்றி இலங்கை கடற்படையினர் கொல்வதாகக் கூறுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

 

18-ந் தேதி கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 214 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அடுத்த நாள் 213 படகுகள் கரை திரும்பியது. ஒரு படகு மட்டும் காணவில்லை. அப்போது, "இலங்கை கடற்படை கப்பலை மீனவர்களின் படகில் இடித்து மூழ்கடித்துவிட்டார்கள். ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவருக்குச் சொந்தமான படகில், அதே பகுதியைச் சேர்ந்த ஏ.மெசியா(30), வி.நாகராஜ்(52), என்.சாம்(28), எஸ்.செந்தில்குமார்(32) ஆகிய 4 மீனவர்களும் கடலில் மூழ்கியுள்ளனர். சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாத இலங்கை கடற்படை, மீனவர்கள் மீளக்கூடாது என்பதற்காக படகு மூழ்கிய பகுதியிலேயே சுற்றிவந்தனர். அதனால் யாராலும் 4 மீனவர்களையும் காப்பாற்ற முடியவில்லை" என்றார்கள் சக மீனவர்கள்.

 

Minister, Collector pays tribute to fishermen

 

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி உறவினர்களும், மீனவர்களும் போராட்டக்குரல் கொடுத்த நிலையில், தேடுவதாக சொன்னார்கள். ஆனால் இலங்கை கடற்பகுதியில் முதலில் இரு சடலங்களும், பிறகு ஒவ்வொரு சடலமாக 4 சடங்களும் மீட்கப்பட்டது. இந்நிலையில் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காணாமல் போன மீனவர்களின் படகை இடித்து மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிழக்கு கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டமும் செய்தனர்.

 

தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதலால் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் வழங்கக்கோரி அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் மற்றும் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

 

ஆனால், இறந்த மீனவர்களின் சடலங்களை ஒப்படைக்கும் வரை கடலுக்குச் செல்லமாட்டோம் என்று மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இன்று கோட்டைப்பட்டினம் மீனவர்களின் இரு படகுகளில் இலங்கை சென்று 4 மீனவர்களின் உடல்களைப் பெற்றுவந்தனர். மீனவர்களின் உடல்களைப் பெற்றுச் செல்ல அவர்களின் உறவினர்கள் அமரர் ஊர்திகளுடன் காத்திருந்தனர். மதியம் 2.30 மணிக்கு கரைக்கு கொண்டுவரப்பட்ட மீனவர்களின் உடல்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், ரெத்தின சபாபதி எம்.எல்.ஏ, அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பிறகு மீனவர்களின் உடல்களை உறவினர் பெற்று சொந்த ஊர்களுக்குக் கொண்டு சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.