மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி பார்வையிட்டார்.
வருகின்ற 15 ஆம் தேதி மதுரை அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேடு கிராமத்திலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது. இதில் பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது உலகப்புகழ் பெற்றது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அணில் சேகர் மற்றும் அதிகாரிகள் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கின்ற பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டின் வாடிவாசல் பகுதி, காளைகளை திறந்துவிட கொண்டுவரப்படும் இடம், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும் இடம் உள்ளிட்ட இடங்களை அமைச்சர் பார்வையிட்டார். இதுவரை மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5,399 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, ''கோர்ட் சொன்னதை மாவட்ட ஆட்சியர் நடைமுறைப்படுத்தியுள்ளார். எப்பொழுதுமே நடைபெறுவது போன்று இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு சிறப்பாக அமையும். மூன்று ஜல்லிக்கட்டிலும் பாகுபாடு இல்லாமல் அரசினுடைய சார்பில் எல்லா பாதுகாப்புடன், சில கட்டுப்பாடுகளுடன் சிறப்பாக நடைபெறும்'' என்றார்.