திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை தலைமையிடமாக கொண்டு ஜாகீதார்கள் குறுநில ஜமீன்களாக இருந்து ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் இருப்பிடமாக எஸ்.வி.நகரம் இருந்துவந்தது. இங்கு அவர்களது பெரிய அரண்மனை உள்ளது. அதேப்போல் ஆரணியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சிறுமூர் என்கிற இடத்தில் கோடைக்காலத்தில் தங்குவதற்கான ஓர் அரண்மனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை 1850களில் கட்டப்பட்டுள்ளது.
ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் இயற்றப்பட்டபின் இந்த அரண்மனைகள், அவர்களது சொத்துக்கள் அரசின் வசம் வந்தன. அதன்பின் அதனை பராமரிக்காமல் அரசாங்கம் விட்டுவிட்டது.
தற்போது இந்த அரண்மனைகள் பாழடைந்து போய் உள்ளன. எஸ்.வி நகரத்தில் உள்ள அரண்மனையில் அரசு அலுவலங்கள் செயல்படுவதால் ஒரளவு அது பாதுகாப்பாக உள்ளன. சிறுமூர் கிராமத்தில் உள்ள அரண்மனை பாதுகாப்பற்ற முறையில் உள்ளன. இங்கு சட்ட விரோத காரியங்கள் நடைபெறுகின்றன.
கண்ணாடி மாளிகை எனப்பட்ட அந்த அரண்மனையின் சுவர்களில் தற்காலத்தில் பெரிய நிறுவனங்களின் சுவற்களில் அலங்காரமாக அமைத்து ட்ரண்டாகிவரும் வால்பேப்பர்கள் 1850ளிலேயே அழகான வால்பேப்பர்கள் அரண்மனை சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், தற்போது அந்த அழகான சுவர்கள் காதலர்களின் பெயர்களால் பெயிண்ட்களால் கிறுக்கப்பட்டுள்ளன. கதவுகள், வாசற்கால்கள், கண்ணாடிகள், இரும்பு சட்டங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. இதனை சுற்றி 3 ஏக்கர்க்கு நிலமும் உள்ளது. பசுமையான இடத்தில் அருமையாக அமைக்கப்பட்ட இந்த இடம் குடிகாரர்களின் கூடாரமாக உள்ளது.
இது வரலாற்று ஆய்வாளர்களை பெரிதும் கவலைக்கொள்ள வைத்தது. இந்த அரண்மனையை பாதுகாத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. அதன்படி ஆரணி அறம் செய்வோம் அமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் போன்ற அமைப்புகள் இணைந்து ஆகஸ்ட் 19ந்தேதி மதியம் அரண்மனை வளாகத்தில் சிறு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அந்த அமைப்பின் முக்கிய பிரமுகர்கள், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நாணய சேகரிப்பாளர்கள் அமைப்பினர், கிராம பிரமுகர்கள், இளைஞர்கள் என 50க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் பங்குப்பெற்றனர்.
அரண்மனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வது, அரண்மனையை சுற்றி கம்பி வேலி அமைப்பது, எச்சரிக்கை பலகை அமைப்பது, பாதுகாப்புக்கு பாதுகாவலரை நியமிப்பது, பழமை மாறாமல் தமிழக தொல்லியல் துறையினரை வைத்து கட்டிடத்தை சீரமைப்பது என முடிவு செய்துள்ளனர். அதன்பின் இதனை தமிழக சுற்றுலா கழகத்தின் மூலமாக சுற்றுலா மையம் என்கிற பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்துள்ளனர்.