Skip to main content

5 நாளில் 3 பேரை அடுத்தடுத்து தாக்கி கொன்ற ஒற்றை யானை! கிராம மக்கள் கலக்கம்!!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

krishnagiri district sulur forest elephant peoples

 

சூளகிரி அருகே, ஆவேசமாக சுற்றித்திரியும் ஒற்றை யானை, கடந்த 5 நாள்களில் அடுத்தடுத்து மூன்று பேரை தாக்கி கொன்றதால், சுற்று வட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகேயுள்ள ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானை, இரவு நேரங்களில் சுற்று வட்டார கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்த யானை, கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி, சூளகிரி காட்டுப்பகுதிக்குள் வந்திருப்பது தெரிய வந்துள்ளது.

 

கடந்த 16- ஆம் தேதி காலை, புலியரசி கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஜோகீர்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் ஏ.செட்டிப்பள்ளி பகுதியில் உள்ள அவர்களுடைய விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது, புதர் பகுதிக்குள் மறைந்து இருந்த ஒற்றை யானை, திடீரென்று வெளியே வந்து இருவரையும் துரத்திச்சென்று தாக்கியது.

 

யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஒற்றை யானையை கர்நாடகா மாநிலம் கே.ஜி.எஃப். வனப்பகுதிக்குள் விரட்ட, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, தக்காளி தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ஒற்றை யானை, மீண்டும் ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதிக்குள் புகுந்ததால் அதை விரட்டும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.

 

மீண்டும் நேற்று முன்தினம் சூளகிரி அருகே, ஆபிரி காட்டுப் பகுதியில் விவசாயி முனுசாமி என்கிற அப்பையா (57) யானையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். ஆக. 18- ஆம் தேதியன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

 

குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப்பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இதற்கிடையே, ஆபிரி காட்டுப்பகுதியில் அப்பையா சடலமாக கிடப்பதாக கிராமத்தினர் சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஏ.செட்டிப்பள்ளி காட்டில் இருந்து நள்ளிரவில் ஒற்றை யானை வெளியேறி சுற்றித்திரிந்தபோது, அந்த வழியாக சென்ற அப்பையாவை யானை மிதித்து கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது. அப்பையா, ஆபிரியில் உள்ள தனது விவசாய நிலத்தை கவனித்துக்கொண்டு, அங்கேயே தனியாக குடிசை போட்டு வசித்து வந்தார். இது ஒருபுறம் இருக்க, அந்த ஒற்றை யானை, ஆக. 19- ஆம் தேதி, ஓசூர் பேரண்டபள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் ஆவேசமாக சுற்றித்திரிந்ததை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.

 

கடந்த ஐந்து நாட்களில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஒற்றை யானை, ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரிவதால் ஏ.செட்டிப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அந்த ஒற்றை யானையை, கும்கி யானையை மூலமோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.