Skip to main content

கரோனா ஹாட்ஸ்பாட் ஆன கோயம்பேடு...?? பிற மாவட்டங்களும் பாதிப்பு!!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020
 koyambedu Corona Hotspot?? Other districts are also affected !!

 

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் என விவசாய பொருட்கள் சந்தைக்கு எடுத்து வரப்படுகிறது. அதேபோல் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக சென்னை கோயம்பேட்டில் கொத்தமல்லி வியாபாரி ஒருவருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, அங்கு தொடர்ந்து பல்வேறு வியாபாரிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. சென்னையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கோயம்பேட்டில் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் குவிந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.


தற்பொழுது வரை கோயம்பேடு சந்தை சென்றுவந்த 88 பேருக்கு கரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கோயம்பேடு சந்தையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்ற 38 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது. கோயம்பேட்டில் இருந்து அரியலூர் சென்ற 19 பேருக்கு கரோனா  உறுதியாகி உள்ளது. மேலும் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருந்து கடலூர் சென்ற லாரிகளில் சென்ற 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 9 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் சென்றவர்களுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், தற்போது கோயம்பேட்டில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்களால் பிற மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு  அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் கோயம்பேட்டில் இருந்து தங்கள் மாவட்டத்திற்கு வந்தவர்கள் பற்றிய ஆய்வு பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


இந்நிலையில் கோயம்பேடு, சென்னையில் கரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளதாக பொதுமக்களிடையே ஒரு வித அச்ச நிலையும் சற்று மேலோங்கியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்