Skip to main content

பங்களாவில் போதை பார்ட்டி! இளைஞர்கள் அட்டூழியம்! 

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

kanyakumari youth atrocities

 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த 19-ம் தேதி இரவு தலையில் ரத்தம் சொட்ட, சொட்ட குளச்சல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மருத்துவமனைக்கு வந்த குளச்சல் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி, “எனது பிறந்த நாள் பார்டியில் காதலன் புகுந்து மண்டையை உடைத்துவிட்டார். நான் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படிக்கிறேன். கல்லூரிக்கு சென்று வருவதற்கு வசதியாக இங்கு உறவினருக்கு சொந்தமான பங்களா ஒன்றில் தனியாக இருக்கிறேன். என் காதலனான சுங்கான்கடையைச் சேர்ந்த அஜினும் நானும் பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்தோம். தற்போது அவனுக்கு என் மீது சந்தேகம் இருப்பதால் பிறந்தநாள் பார்டிக்கு அவனை அழைக்கவில்லை. அந்த ஆத்திரத்தில் என்னை தாக்கி விட்டான்” என்றார். மாணவி சொன்ன இந்தத் தகவல் போலீசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து சம்பவம் நடந்த அந்த பங்களாவுக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு அறைக்குள் மது, சிகரெட் மற்றும் ஆண் பெண்ணின் ஆடைகள் உட்பட பலவும் அங்குமிங்கும் கிடந்தன.

 

இந்த நிலையில், போலீசார் அஜீன் மீது வழக்கு பதிவு செய்ததையடுத்து அஜீன் தரப்பு போலீசாரிடம் கூறும் போது, ‘காதலர்களாக வலம் வந்த அஜீனும் அந்த பெண்ணும் அடிக்கடி பைக்கில் ஊர் சுற்றி வருவார்கள். கடந்த சில மாதங்களாக அந்த பெண்ணின் நடவடிக்கையில் மாற்றம் வந்ததால் அவள் மீது அஜீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், 19-ம் தேதி இரவு அந்த பெண் தங்கியிருந்த பங்களா வீட்டிற்கு சென்று இருக்கிறான். அப்போது கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியே 3 பைக்குகளும் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் அஜீன் அங்கிருந்த ஒரு மரம் வழியாக ஏறி உள்ளே பார்த்த போது அங்கு போதையுடன் 7 பெண்களும், 4 ஆண்களும் அரை குறை ஆடையுடன் இருந்தனர். 

 

இதை பார்த்த அஜீனுக்கு ஆத்திரம் ஏற்படவே கதவை உடைத்து உள்ளே சென்று அந்த பெண்ணை தாக்கியிருக்கிறான். வாரத்துக்கு இரண்டு நாள் கண்டிப்பாக அங்கு பார்ட்டி நடக்குமாம். இதற்கு கல்லூரி மாணவிகளையும், வெளியில் இருந்து ஆண்களையும் அந்த பெண் வரவழைப்பார். இதற்காக ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும் வைத்திருக்கிறார்’ என்றனர்.

 

இந்தநிலையில் இந்த சம்பவம் அந்த மாணவியுடன் தொடா்பில் இருந்த மற்ற கல்லூரி தோழிகளின் பெற்றோருக்கு தெரிய வர அவர்களும் தங்களின் மகள் இதில் பாதிக்கபட்டிருப்பாளோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

 

இதற்கிடையில் அந்த மாணவியின் தோழியான கல்லூரி மாணவி ஒருவர் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு செவ்வாய் கிழமை எனக்கு இரண்டு பெண் தோழிகள் போன் செய்து பர்த் டே பார்ட்டி தறேன் வா வெளியே போய் ஜாலியா இருக்கலாம்னு கூப்பிட்டாங்க. நானும் பெண்கள் மட்டும் தானே என்று நினைச்சி அவங்க குடிக்கிறது தெரியும் அதுக்கு வேண்டி நானும் போனேன்.

 

வெளியே போன பிறகு தான் தெரியும் ஒரு ஃப்ரண்ட் பையன் வாரான், அவன் தான் எல்லாம் செய்றான் என்று அங்கு போன பிறகு தான் தெரியும் மற்ற விஷயங்களும் இருக்குனு. இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா நான் போயிருக்க மாட்டேன். அங்க எல்லாரும் செய்யுறத பார்க்கும் போது எனக்கும் செய்ய ஆசை தூண்டியது அதுனால அன்னைக்கு நானும் கலந்துகிட்டேன். 

 

அடுத்தும் திரும்ப ஒரு வெள்ளிக்கிழமை கூப்பிட்டாங்க போறதுக்கு விருப்பம் இல்லாததால் போகல. இப்பம் நான் தான் அதை பயன்படுத்தினேன் என சொல்லி, என்ன மட்டும் காட்டி கொடுத்து மத்தவங்க தப்பிக்க பாக்குறாங்க. அதுனால தான் அழுது கொண்டே இந்த ஆடியோ வெளியிட்டு இருக்கேன்” என்கிறார். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். இதற்கிடையில் மருத்துவமனையிலிருந்த அந்த பெண்ணும் தலைமறைவாகியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்