Skip to main content

விவரம் கேட்ட நீதிமன்றம்; விசாரணை வளையத்தில் 'ஈஷா'

Published on 02/10/2024 | Edited on 02/10/2024
The inquiry continues for the second day on Isha Yoga

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தன்னுடைய இரண்டு மகள்களையும் ஈஷா யோகா மையத்திலிருந்து மீட்டுத் தர வேண்டும் என பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி, நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது' என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை வரும் அக்.4 தேதிக்குள் தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நேற்று  ஈஷா யோகா மையத்தில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடைபெற்றது. டிஎஸ்பி சிவகுமார் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடிப்படை வாகனம், அரசு அதிகாரிகள் வாகனம் என 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளே சென்றது. நேற்று சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஈஷா யோகா மையத்தில் விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்