Skip to main content

ஆற்றில் மூழ்கி மகன் இறந்த அதிர்ச்சியில் தாய் மரணம்!-அடுத்தடுத்து தாயும், மகனும் இறந்ததால் சோகம்!

Published on 20/09/2021 | Edited on 20/09/2021

 

incident in puducherry

 

புதுச்சேரி சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி லட்சுமி. இவர்களது இரண்டாவது மகன் ஜீவா (25). இவர் நேற்று மாலை அரியாங்குப்பம் காசநோய் மருத்துவமனை எதிரே உள்ள ஆற்றில் தனது நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளையில், ஜீவா மட்டும் தனியாக ஆற்றில் குளிக்க இறங்கியுள்ளார். அந்த இடம் சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டுள்ளது தெரியாமல் ஜீவா ஆற்றில் இறங்கியவுடன் நீரில் மூழ்கினார். 

 

puducherry

 

அவரது நண்பர்கள் உடனடியாக தவளக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரவு வரை தேடியும் ஜீவாவின் உடல் கிடைக்கவில்லை. அதேசமயம் ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்ட அவரது தாயார் முத்துலட்சுமி (50) வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு ஏற்கெனவே இதய நோய் இருந்தது. இதையடுத்து முத்துலட்சுமியை அவரது உறவினர்கள் உடடினயாக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையில் இருந்தார்.

 

இந்நிலையில் இன்று காலை ஜீவா சடலம் அப்பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனும், தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்