Skip to main content

“தரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும்” - முதல்வர்

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

If those crawling on the ground look up they will see the progress of Tamil Nadu says CM

 

திருவண்ணாமலையில் இன்று ( 22.10.2023) 8 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கும் திமுக வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  பேசுகையில், “தொண்டர்கள் தான் சீக்ரெட் ஆப் மை எனர்ஜி (Secret Of My Energy). இந்த பாசப்பிணைப்பை உடன்பிறப்பே என்ற சொல் மூலமாக உருவாக்கி கொடுத்தவர் கலைஞர். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் திமுகவும். அதை யாராலும் பிரிக்க முடியாது. திமுக உருவான போது நடந்த முதல் பொது கூட்டத்தில் 1451 ரூபாய் வசூல் ஆனது. அதில் 100 ரூபாயை பாவூர் சண்முகம் வழங்கியது. 1957 தேர்தலில் முதல் முதலாக திமுக போட்டியிட்டு 15 பேர் வெற்றி பெற்றனர். அந்த 15 பேரில் 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதில் பாவூர் சண்முகமும் ஒருவர் ஆவார். முதல் நாடாளுமன்ற தேர்தலில் 2 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒரு தொகுதி திருவண்ணாமலை ஆகும்.

 

வாக்குச்சாவடி முகவர்கள் பெற்றுள்ள பயிற்சி ஒரு தேர்தலுக்கானது மட்டுமல்ல. இந்த பயிற்சி அனைத்து தேர்தல்களுக்கும் பொருந்தும். வாக்குச்சாவடி முகவர்களை நம்பிதான் நாற்பதும் நமதே என்று முழங்கி வருகிறோம். ஒவ்வொரு வாக்காளர்களின் குடும்பத்தில் ஒருவராக வாக்குச்சாவடி முகவர்கள் மாற வேண்டும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “தரையில் ஊர்ந்தவர்கள் தலை நிமிர்ந்து பார்த்தால் தமிழ்நாட்டின் முன்னேற்றம் தெரியும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விடியல் இந்தியா எங்கும் வரும் காலம் கனிந்துவிட்டதை, திருவண்ணாமலையில் கூடியிருந்த பாக முகவர்களின் எழுச்சி காட்டுகிறது. தீபம் தெரிவது போல் ஒளி தெரிகிறது. நிச்சயம் இந்தியா வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.

 

If those crawling on the ground look up they will see the progress of Tamil Nadu says CM

 

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக திருவண்ணாமலையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட அருணை பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு கையடக்க மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் சிலையையும் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.