முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தாக்கல் செய்தது. 600 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்த பின் ஆறுமுகசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கால தாமதம் நான் செய்ததாக கூறுகின்றனர். முதல் ஒரு மாதம் அறிவிப்பு விடப்பட்டது. அதற்கு பின் ஒரு வருடத்தில் 149 சாட்சிகளை விசாரித்தோம். 500 பக்கம் ஆங்கிலத்திலும் தமிழில் 608 பக்கங்களும் மொத்தம் மூன்று பாகங்களாகவும் அதன் சுருக்கத்தையும் கொடுத்துள்ளோம். அதை வெளியிடலாமா வேண்டாமா என அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும். அதிகமான பேட்டிகளை பார்த்து நமது அறிக்கையில் ஏதாவது விடுபட்டுள்ளதா என பார்த்து அனைத்தையும் சேர்த்துள்ளேன். விசாரணைக்கு மருத்துவர்களை முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.
ஜெயலலிதா வீட்டிற்கு சென்று விசாரிக்க, பார்க்க வேண்டிய முக்கியத்துவம் இல்லை. ஜெயலலிதா வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதில் எந்த வகையான சந்தேகமும் இல்லை. அப்படி இருக்கையில் அவரின் வீட்டை சென்று பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவரின் உடல்நிலை, அவரின் பழக்க வழக்கங்கள் என்ன, அவர் தன் உடலை எப்படி பார்த்துக்கொண்டார், யார் யாரெல்லாம் பார்த்துக்கொண்டனர் என்பனவெல்லாம் அறிக்கையில் உள்ளது. அறிக்கையில் நான் எழுதியது மிகக் குறைவு. சாட்சியங்கள் என்ன சொன்னார்களோ அதைத்தான் அதிகமாக சேர்த்துள்ளேன்" என கூறினார்