Skip to main content

நிதி நிறுவன மோசடி விவகாரம்; 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

hijav associates private limited finance issue

 

சென்னை கீழ்ப்பாக்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இதன் மேலாண் இயக்குநர்களாக அலெக்சாண்டர் மற்றும் இவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் செயல்பட்டு வந்தனர். மேலும் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபர்களுக்கு 15 சதவீதம் வட்டி தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி முதலில் முதலீடு செய்த நபர்களின் பணத்தை வைத்து அவர்களுக்கே ஒவ்வொரு மாதமும் 15 சதவீத வட்டி கொடுத்துள்ளனர். அதன் பிறகு வசூலித்த பணத்துடன் நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டனர்.

 

இதனை அறிந்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின்படி இந்த வழக்கில் இதுவரை குரு மணிகண்டன், சுஜாதா பாலாஜி, சாந்தி பாலமுருகன், முகமது ஷெரீப், , கல்யாணி, பாரதி ரவிச்சந்திரன், இவரது மனைவி சுஜாதா ரவிச்சந்திரன் மற்றும் கலைச்செல்வி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இயக்குநர்களான சவுந்தரராஜன், சுரேஷ், சந்திரசேகர் பிரிசிட்லா, செல்வம் மற்றும் கௌசல்யா ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

 

இந்த மோசடி தொடர்பாக ஹிஜாவ் நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர், நிதி நிறுவன இயக்குநர்கள் வீடு மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் என சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 47 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி 3 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், சுமார் 25 லட்ச ரூபாய்  மதிப்புள்ள 448 கிராம் தங்கம், மற்றும் 75 ஆயிரம் ரூபாய்  மதிப்பு 1 கிலோ அளவிற்கான வெள்ளி, 80 லட்சம் மதிப்புள்ள 8 கார்களை பறிமுதல் செய்தனர்.அதனை தொடர்ந்து நிதி நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட 162 வங்கி கணக்குகளில் இருந்து 14 கோடியே 47 லட்சம் ரூபாய் பணமும்  முடக்கப்பட்டது. குற்றவாளிகளின் 75.6 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், 90 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சோதனையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 19 துணை நிறுவனங்களை தவிர, ஹிஜாவ் நிதி நிறுவனத்தில் மட்டும் 14 ஆயிரத்து 126 பேர் மொத்தம்  1046 கோடி ரூபாய் பணத்தை  முதலீடு செய்தது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் நிறுவன மேலாண் இயக்குநர் அலெக்சாண்டர், இவரது மனைவி மகாலட்சுமி ஆகியோருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் இனியா, சுஜாதா காந்தா மீதும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

hijav associates private limited finance issue

 

இந்நிலையில், ஹிஜாவ் நிதி நிறுவன மேலாண் இயக்குநர்கள் அலெக்சாண்டர், இவரது மனைவி மகாலட்சுமி, இயக்குநர்களான இனியா, கோவிந்த ராஜுலு, சுஜாதா காந்தா, ரமேஷ், சுரேந்திரகுமார், முத்துக்குமரன், முரளிதரன், சாமி சேகர் என்கிற காலேப் சேகர், ராம்ராஜ், ஜெயக்குமார், ஜெயசஞ்சுலு, துரைராஜ், ப்ரீஜா ஆகிய 15 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.

 

இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தாலோ, வேறு ஏதேனும் தகவல்கள் தெரிந்தாலோ பொதுமக்கள் நேரிலோ, தொலைபேசி வாயிலோ பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உறுதியான மற்றும் சரியான தகவல் கொடுக்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். இது குறித்து தகவல் அளிக்க விரும்புவோர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்), பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சி கல்லூரி, அசோக் நகர், சென்னை- 600083 என்ற முகவரிலோ அல்லது 400-22504311 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ஹிஜாவ் நிதி நிறுவனம் மூலம் பாதிக்கப்பட்டு இதுவரை புகார் அளிக்காத முதலீட்டாளர்கள் adspeowhijau@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது  044-22504332 என்ற தொலைபேசி  எண்ணிற்கோ தங்களது புகாரை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்