தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள அண்ணா சிலைக்கு தமிழக முன்னாள் அமைச்சர்கள் அறிஞர் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “அண்ணா பண்பாட்டு அரசியலை வளர்த்தவர். ஆனால் அண்ணா வழியில் ஆட்சி செய்கிறோம் என கூறி பண்பாட்டு அரசியலுக்கு மாறாக எதிர்ப்பவர்களை ஒடுக்க வேண்டும் என நாகரீகமற்ற அரசியலை திமுக முன்னெடுக்கிறது. நரிக்குறவர்களை பிற்படுத்தப்பட்ட பிரிவில் இவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி சேர்த்ததாக கூறுகின்றனர். ஆனால் இதை முதன் முதலில் வலியுறுத்தியவர் ஜெயலலிதா. அதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதே போல் எங்களது ஆட்சிக் காலத்தில் மீனவர்களையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் தற்போது இந்த அரசு அதை பற்றி எந்த அக்கறையும் கொண்டதாக தெரியவில்லை. தமிழக அரசு திட்டங்களின் பெயர்களை மட்டும் பிரமாதமாக வைக்கிறது. பண்ருட்டியாரை யார் வேண்டுமானலும் போய் சந்திக்கலாம். அவர் வர வேண்டாம் என சொல்லமாட்டார். ஆனால் ஓபிஎஸ் பண்ருட்டியாரை சந்தித்ததற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது. ஜெயலலிதாவாக மக்கள் என்னை பார்க்கின்றனர் என சசிகலா கூறுகிறார். சசிகலாவிற்கு நகைச்சுவைத்தன்மை அதிகம். ஒரு ஜோக்கை சிரிக்காமல் சொல்லுவார். மலை எங்கே? மடு எங்கே?” என கூறினார்.