Skip to main content

கோகுல்ராஜ் வழக்கு விசாரணை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published on 26/01/2019 | Edited on 26/01/2019
y

 

பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைத்து, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.


சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அவருடைய சடலம், மறுநாள் மாலையில் கைப்பற்றப்பட்டது. 


இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை திருச்செங்கோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் கடந்த 2018, ஆகஸ்ட் 30ம் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை  நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. 

 

a


யுவராஜ் கூட்டாளிகளுள் ஒருவரான சதீஸ் என்கிற சதீஸ்குமார் உள்பட 11 குற்றவாளிகளை கைது செய்ததில், திருச்செங்கோடு விஏஓ மணிவண்ணன் என்பவரை போலீசார் அரசுத்தரப்பு சாட்சியாக சேர்த்திருந்தனர். அவர், கடந்த 10, 11 மற்றும் 18ம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். குற்றவாளிகள் கைது  செய்யப்பட்டபோது அவர்களிடம் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் குறித்தும் அடையாளம் காட்டினார்.

 

s


இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 25, 2019) அவரிடம் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் ஜி.கே. என்கிற கோபாலகிருஷண லட்சுமணராஜூ மற்றும் சண்முகம் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினர்.


சிசிடிவி வீடியோ காட்சிகள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது உடன் இருந்தீர்களா? ஒப்புதல் வாக்கமூலம் உங்கள் முன்னிலையில் பெறப்பட்டதா? உள்ளிட்ட கேள்விகளைக் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டனர். இதையடுத்து, மற்ற அரசுத்தரப்பு சாட்சிகளிடம் வரும் பிப்ரவரி 1ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதி இளவழகன் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் யுவராஜின் கார் ஓட்டுநரான அருண், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் அழைத்து வர எஸ்கார்ட் போலீசார் இல்லாததால், வெள்ளிக்கிழமையன்று நடந்த விசாரணக்கு அவரை ஆஜர்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்