Skip to main content

கோவில் முன் இளைஞரின் தலை வெட்டி வீசப்பட்ட சம்பவம்; சிறுவன் உட்பட 5 பேர் கைது

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

In front of the temple, the head of the youth was chopped off; 5 people including a boy were arrested

 

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நபரின் தலையை வெட்டி கோவிலின் முன்பு வீசிய சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித். இவர் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித்தை காரில் கடத்திய சில மர்ம நபர்கள் வள்ளுவபாக்கம் ரயில்வே பாதை அருகே தலை வேறு உடல் வேறாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். மேலும் அஜித்தின் தலையை தாங்கி எனும் கிராமத்தில் உள்ள கோவிலின் முன்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.



காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் கோவிலின் வாசல் பகுதியில் மனித தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அஜித்தின் தலையும் வேறு இடத்தில் கிடந்த அவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரின் தலை வெட்டப்பட்டு கோவிலின் முன்பு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



தொடர்ந்து போலீசார் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அஜித்தை கொலை செய்த  விக்னேஷ், சத்தியசீலன், குமரன், ஆதித்யா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்