Skip to main content

இறந்த நண்பனுக்காக உயிரை விட்ட இளைஞர்

Published on 14/11/2022 | Edited on 14/11/2022

 

friend who gave  sacrificed his life for passed away friend
சீனிவாசன், பிரபு

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது சீனிவாசன். இவரது நெருங்கிய நண்பர் 20 வயது பிரபு. நெருங்கிய நண்பர்களான இவர்கள், சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் சாலையில், நரசிங்கராயன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது வாகனத்தை ஓட்டிய பிரபு திடீரென பிரேக் அடிக்க பின்னால் அமர்ந்திருந்த சீனிவாசன் நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவலறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனிடையே தன்னுடைய நண்பன் தன் கண் முன்னே இறந்ததைக் கண்டு கதறி அழுத பிரபு, அப்பகுதியில் கிடந்த கூரான இரும்பு ஆயுதத்தை எடுத்து தனது கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

 

நண்பனின் இறப்பின் துக்கம் தாளாது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற பிரபுவைக் காப்பாற்றி மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரபு நள்ளிரவில் அனைவரும் தூங்கிய பின் நண்பனின் இறப்பிற்குத் தன்னைக் காரணமாகக் கருதி வீட்டின் அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் இறந்த துக்கம் தாளாமல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்