Skip to main content

ஏழுபேர் விடுதலை... இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கும் ஆளுநர்! –உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Published on 29/07/2020 | Edited on 30/07/2020

 

former prime minister rajiv gandhi incident chennai high court tn govt

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலை விவகாரத்தில், பல்நோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 28 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பேரறிவாளனுக்கு உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உள்ளன. அவருக்கு, முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, கரோனா சூழலைக் கருத்தில்கொண்டு, தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளும் விதமாக, 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும்.  தற்போது,  கரோனா காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனது மகனுக்கு பரோல் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். 

former prime minister rajiv gandhi incident chennai high court tn govt

 

இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது, இரண்டு ஆண்டுகளாகியும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன்? மேலும் அரசியல் சாசனத்தில் ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், 2 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருக்கலமா? அமைச்சரவை முடிவை ஏற்பதும் நிராகரிப்பதும் ஆளுநரின் உரிமை. ஆனால் முடிவைத் தெரிவிக்க வேண்டும். அரசியலமைப்பு பதவியில் உள்ளவர்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில்தான், அவர்கள் முடிவெடுக்க வேண்டிய விவகாரங்களில் கால அவகாசங்கள் நிர்ணயிக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பினார். 

 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பரோல் வழங்குவதில்கூட தகுந்த உத்தரவைப் பிறப்பிக்காத சிறை அதிகாரிகள் மீது ஏன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கக் கூடாது? பரோல் அளிப்பதும், நிராகரிப்பதும் அதிகாரிகள் உரிமைதான். ஆனால், பரோல் கோரிய மனு மீது முடிவெடுக்க வேண்டும்.

 

கடந்த மார்ச் மாதம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நினைவூட்டல் மனு அளிக்கப்பட்டும்,  ஏன் ஜூலை வரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை? அதிகாரிகள் உரிய முறையில் செயல்படாததால்தான், நீதிமன்றத்தின் வழக்கு சுமை அதிகரிக்கிறது. இதுபோன்ற கவனிக்கக்கூடிய வழக்குகளில்கூட, உரிய பதிலை அதிகாரிகள் அளிக்காமல் உள்ளனர். இதுபோன்ற நிலையில், சாதாரண கைதிகளின் வழக்குகளில் எவ்வாறு இருக்கும் என்பதை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடிகிறது.  

 

அரசு, சிறைத்துறை, அரசு அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமையாற்றினால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை. மனுக்கள் மீது முடிவு எடுக்காமல் கும்பகர்ணன் மாதிரி அதிகாரிகள் தூங்கி கொண்டுள்ளீர்களா? அவர்கள் ஏற்கனவே சிறையில் உள்ளனர். தற்போது வழக்கறிஞருக்கு வேறு செலவு செய்ய வேண்டுமா? இந்தக் கால தாமதத்திற்கு, அரசுக்கு வழக்கு செலவு அபராதமாக விதிக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

 

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், சிறையில் உள்ள கைதிகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

 

http://onelink.to/nknapp

 

கடந்த விசாரணையின்போது, ஏழு பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலாளர், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு (உள்துறைச் செயலாளர்) பதில் அளித்துள்ளார். அதில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க, பல்நோக்கு விசாரணை முகமையின் (MDMA) இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார். பேரறிவாளன் பரோல் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார். 

 

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பரோல் மனு மீது தமிழக சிறைத்துறை, வரும் வெள்ளிக் கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வழக்கின் அடுத்த விசாரணையை வரும்  திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.