Skip to main content

பழுதாகி நின்ற தீயணைப்பு வாகனம்... போய் சேருவதற்குள் எரிந்து முடிந்தது ஏழை குடிசை

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் ரஹும். பழைய வாணியம்பாடியில் பாலாற்றங்கரை அருகே குடிசை வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறார். 

 

இந்நிலையில் மே 12ந் தேதி (இன்று) மதியம், அவரது குடிசை வீடு திடீரென தீ பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் பார்த்துவிட்டு கத்த வீட்டுக்குள் இருந்த ரஹீம் குடும்பத்தார் வெளியே ஓடிவந்துள்ளனர். வாலியில் தண்ணீர் கொண்டு வந்து தீ மீது ஊற்றியும் தீ அணையவில்லை. இதனால் வாணியம்பாடியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு அப்பகுதி இளைஞர்கள் தகவல் கூறினர்.

 

fire truck repair... The poor cottage burned...

 

தீயணைப்பு வண்டி புறப்பட்டு மின்னல் வேகத்தில் வந்தது. வரும்போது, வழியில் திடீரென நின்றது. வண்டி ஸ்டார்ட் ஆகாமல் மக்கர் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சியான தீயணைப்பு துறையினர், அங்குயிருந்த பொதுமக்களிடம் உதவி கேட்க அவர்கள் தீயணைப்பு தண்ணீர் லாரியை பின்னால் நின்று தள்ளியுள்ளனர். அப்போதும் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்றது. 

 

தீயணைப்பு வண்டி பழுதாகி பாதி வழியில் நின்றதால், தீயை அணைக்க முடியாமல் போனது. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்துப்போயின. அந்த குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

அந்த குடிசை எரிந்து முடிந்தபின் தீயணைப்பு துறையின் தண்ணீர் லாரி வந்து நின்றுள்ளது. அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப, நாங்க என்ன செய்யறது, அரசாங்கம் தர்ற வண்டியை தான் பயன்படுத்தறோம், வண்டி அடிக்கடி பழுதாகி நிற்குதுன்னு சொல்லியாச்சி, மேலதிகாரிகள் சரி செய்ய ஒப்புதல் தராததால் பழுதான வண்டியை வச்சிக்கிட்டு ஓட்டறோம், நாங்க என்ன செய்ய முடியும் என்றுள்ளனர்.

 

வாணியம்பாடி நகரில் தான் தமிழகத்தை ஆளும் அதிமுகவை சேர்ந்தவரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான நிலோபர்கபில் உள்ளார். வாணியம்பாடி என்பது அவரது தொகுதி தான். அமைச்சரின் தொகுதியில், அவரின் ஊரில் உள்ள தீயணைப்பு வாகனம்மே இந்த லட்சணத்தில் இருந்தால் மற்ற ஊர்களில் என்ன மாதிரியிருக்கும் என நினைத்து பாருங்கள் என வேதனைப்படுகின்றனர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள். 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.