Skip to main content

போலி டாக்டர் பட்டம்; ஹரிஷின் வங்கிக் கணக்கு முடக்கம்! 

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

fake doctorate; Harish's bank account is frozen!

 

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கம் ஒன்றில் போலியாக நிறுவனம் ஒன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது தொடர்பான புகார்கள் பூதாகரமாகின. நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, யூடியூப் பிரபலங்கள் கோபி, சுதாகர், நடன இயக்குனர் சாண்டி உள்ளிட்ட பலருக்கு அந்த நிறுவனம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் விருந்தினராகக் கலந்து கொண்டதால் அண்ணா பல்கலைக்கழகம் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்திக் கொள்ள அனுமதித்ததாக அண்ணா பல்கலைக்கழகத் தரப்பு தெரிவித்தது. அதேபோல் அந்த விழாவில் தான் சிறப்பு விருந்தினராக மட்டுமே தான் கலந்துகொண்டதாக வள்ளிநாயகம் தெரிவித்திருந்தார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ''அண்ணா பல்கலைக்கழகம் புனிதமான இடம். இந்த இடத்தில் இது போன்று போலியான விருதுகள் வழங்கும் விழா நடந்திருப்பது தவறானது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இனி தனியார் அமைப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது” எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த சம்பவத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஹரிஷ் என்பவரை  தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஏற்கனவே ஹரிஷ் இது தொடர்பாக முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரீஷை தனிப்படை போலீசார் கடந்த 5ம் தேதி கைது செய்தனர். 

 

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹரிஷின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஆடுதுறையில் உள்ள ஹரிஷின் வங்கிக் கணக்கை முடக்கி பணப் பரிவர்த்தனைகளை சென்னை போலீஸ் ஆய்வு செய்துவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்