Skip to main content

மறுமணம் செய்த கவுசல்யா ராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா? ஈஸ்வரன்

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
ka

 

கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடுமலைப்பேட்டையில் உயிரிழந்த சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம் செய்து கொண்டிருக்கின்ற செய்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. கணவனை இழந்த ஒரு பெண் மறுமணம் செய்வதும், அந்த திருமணத்தை நடத்தி வைப்பதும் வரவேற்கத்தக்கது தான். கவுசல்யா ஒரு சாதாரண பெண் அல்ல. அரசுக்கு எதிரான சித்தாந்த கொள்கைகளோடு ஒன்றிப்போய் இருப்பவர். தன்னுடைய காதலை காப்பாற்றுவதற்காக பெற்ற தாய்தந்தையரையே  தூக்கில் போடுவேன் என்று சபதம் எடுத்து கொண்டிருப்பவர். தனக்கு இனி வாழ்க்கையே சங்கருடன் கொண்ட காதலுக்காகவும், இலட்சியத்திற்காகவும் வாழ்வதுதான் என்று உரக்க பேசியவர். அப்படிப்பட்ட ஒருவர் இன்னொரு மனிதருடன் கணவர் இறந்து ஓராண்டுக்குள்ளேயே காதல் வயப்பட்டு இப்போது இரண்டாவது ஆண்டில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய தெய்வீக காதலை பற்றி உணர்ச்சி பூர்வமாக கவுசல்யா தொலைக்காட்சிகளில் பேசியதை கண்டு மெய்சிலிர்த்து போன இளம் பெண்கள் நிறைய பேர் உண்டு. அப்படிப்பட்ட ஒரு பெண் இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கைக்கு மன மாற்றத்துடன் தயாராகியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

 

es

 

கவுசல்யா ஆதரவற்ற பெண் என்றும், கணவனை இழந்த பெண் என்றும், மிகப்பெரிய கொடுமைக்கு உள்ளான பெண் என்றும் மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இப்போது வெலிங்டன் கன்டோன்மென்டில் வேலை பார்த்து வருகிறார். அரசு செயல்பாடுகளுக்கு எதிரான ஒரு சித்தாந்ததையும், புரட்சி என்ற பெயரில் எதிர்மறையான கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டு தீவிரமாக பணியாற்றி வருபவர். அந்த கொள்கைகளை பிரச்சாரமும் செய்து வருகிறார். அப்படி இருப்பவர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழே இராணுவ ரகசியங்களை அறிகின்ற ஒரு இடத்தில் பணியாற்றுவது சரியாக இருக்குமா ?. வேறு ஒரு துறையில் அவருக்கு பணி மாறுதலை கொடுப்பதன் மூலமாக இந்த பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பு துறை விடுவித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும்’’என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்