Skip to main content

விஜயகாந்த் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Edappadi Palaniswami condoles Vijayakanth

தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்(71) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு சிகிச்சை முடிந்து குணமடைந்து கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில் நேற்று மீண்டும் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் நேற்று மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தொண்டர்கள் ரசிகர்கள் பொதுமக்கள் எனப் பலரும் அவரது வீட்டை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். 

இதனிடையே விஜயகாந்தின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகினறனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், அன்பு சகோதரருமான விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அன்னாரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், விஜயகாந்த் குடும்பத்தினர் மற்றும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ள, மக்களால் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்