டெல்லியில் நடைபெற்று வரும் முதலமைச்சரின் சந்திப்புகள் குறித்து தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ்நாட்டின் நலனுக்காக மத்திய அரசின் அமைச்சர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டு நலன் சார்ந்த 14 கோரிக்கைகளை அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் அளித்துள்ளார். முதலமைச்சர் கோரிக்கைகளை எடுத்துரைத்த போது, பிரதமர் அதை உன்னிப்பாகக் கவனித்ததை அனைவரும் அறிவர். இலங்கை பிரச்சனை உள்பட கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காகவும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர்.
தன்னைக் காப்பற்றிக் கொள்ள எந்த தேவையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் டெல்லி வந்தது எல்லாம் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். அ.தி.மு.க. ஆட்சியில் மாநில உரிமைகளுக்காகவும், மாநிலத்தின் தேவைகளுக்காகவும் டெல்லி வருகை அமைந்தது இல்லை. ஆனால் தற்போது முதலமைச்சர், மாநிலத்தின் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சர்களைச் சந்தித்து வருகிறார்.
டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கும் வரவேற்பை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதலமைச்சருக்கு கிடைத்திருக்கும் மரியாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறு பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி". இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.