Skip to main content

Exclusive: வாசலிலேயே வெட்டிக் கொன்றது ஞாபகமில்லையா..? திருந்துங்க இல்ல..! லாரி உங்க மேல ஏறிடும்.. சிறைத்துறை எஸ்.பி.க்கு மிரட்டல் விட்ட ரவுடி.!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018


"ஆள் கிடைச்சான்னா..? கமாண்டோக்களை விட்டு நொறுக்குறது.! முதலில் திருந்துங்க.! இல்லை திருத்தப்படுவீர்கள்.. பாவத்தின் சம்பளம் மரணம் என்றிருக்கின்றார்கள். இப்படி திருந்தாமல் இருந்தீங்கன்னா..? அப்புறம் நான் பொறுப்பு இல்லை.!! லாரி ஏத்திடுச்சேன்னு பீல் பண்ணக்கூடாது." என சிறைத்துறை எஸ்.பி.க்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார் பிரபல ரவுடி ஒருவர்.

மிரட்டலுக்குள்ளான சிறைத்துறை எஸ்.பி.மதுரை மத்திய சிறைச்சாலையின் எஸ்.பி.யான ஊர்மிளா.! மிரட்டல் விடுத்த ரவுடியின் பெயர் புல்லட் நாகராஜ். தற்பொழுது பெங்களூருவிலும், சென்னையிலும் வசித்து வரும் புல்லட் நாகராஜின் சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகிலுள்ள ஜெயமங்கலம். கொலை கொள்ளை வழிப்பறி என 30க்கும் மேற்பட்ட வழக்குகளைக் கொண்ட சிறைப்பறவையான புல்லட் நாகராஜின் அண்ணன் 2006ல் நடந்த கொலை வழக்கு ஒன்றிற்காக மதுரை மத்திய ஜெயிலில் இருந்து சமீபத்தில் நன்னடத்தை விதிகளின் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். வெளியில் வந்தவர் உடன் பிறந்தவரைப் பார்த்து அங்கு " எஸ்.பி.யின் கமாண்டோக்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட கதையைக்" கூற, கோபத்தில் சிறைத்துறை எஸ்.பி.க்கே, வாட்ஸ்அப்பில் கொலை மிரட்டல் விட்டுள்ளார் ரவுடியான புல்லட் நாகராஜ்.
 

Mdu Prison


அந்த கொலை மிரட்டல் ஆடியோவிலிருந்து., " இந்த கிரேட் ஜெனரல் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண்முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சேக் கொன்றிருக்காங்க.! மதுரை ஜெயிலைப் பொறுத்தவரை உனக்கு நிர்வாகத்திறமையேக் கிடையாது. பத்திரிகை ஆபிசரு(.?) என்கிற முறையில் எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. அடிப்பதற்காகவே கமாண்டோ பார்ட்டிகளை வைச்சு இருக்கீங்க..! உன்னைய மாதிரி சிறையில் கைதியை கைவைச்ச ஒரேக் காரணத்திற்காக ஜெயிலர் ஜெயப்பிரகாஷை எரிச்சு கொன்னது ஞாபமிருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க..? நாங்க திருந்தி படிச்சு இப்ப பெரிய ஆளாக இருக்கோம்.! கைதி யாருக்காவது பிரச்சனை வரட்டும். நானே டாக்டராக மாறி நீ என்ன செய்தியோ, அதையே நான் செய்ய வேண்டியிருக்கும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு அதைப் பத்தி இந்த புல்லட் நாகராஜன் கவலைப்பட மாட்டான்.
 

saf
                   புல்லட் நாகராஜன்


மேம்.! உங்களுக்கு ஒரு ஆப்பர்சூனிட்டி தார்றேன். பழனிக்குமார் ( தலைமைக் காவலர் ) இருக்கானே.! அவன் கஞ்சா கடத்துறவன்.. என்னையக் கண்டால் உச்சா போறவன். அவனை வைச்சு கைதிகள் காசை கொள்ளையடிக்கிறீங்களே உங்களுக்கு வெட்கமா இல்லை.! இதை விடுத்து ------------ வேலை பார்த்துடலாம். இப்ப பேசிறேன்லே ஏதாவது செய்து பாருங்கள். உங்களால முடியாது.. நான் பழைய புல்லட் நாகராஜன் கிடையாது. நீங்க எப்படியும் வெளியில் வந்து தானே ஆகனும்.. நான் ஒன்னும் செய்ய மாட்டேன். பயலுக ஏதாவது செய்திடுவாங்க.. அப்புறம் லாரி உங்க மேல கூட ஏறலாம். பொம்பளையாக இருக்கீங்க.! திருந்துங்க.. இப்படி நடந்துக் கூடாது." என நீள்கிறது 7 நிமிடத்திற்கும் மேலாக பதிவு செய்யப்பட்ட மிரட்டல் ஆடியோ. சிறைத்துறை எஸ்.பிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ரவுடியின் ஆடியோ சிறைத்துறை மத்தியில் பரவ, பரப்பரப்பு அடைந்துள்ளது சிறைத்துறை.

 

சார்ந்த செய்திகள்