Skip to main content

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டருக்கு 'பளார்'! 

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

 

தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி போட்டியிடுகிறார். ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31, 2019) மேச்சேரி அருகே சிந்த மணியூரில் அவர் பொதுமக்களிடம் வாக்கு கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார். பாமக மாநிலத்தலைவர் ஜி.கே.மணி மற்றும் மேட்டூர் அதிமுக எல்எல்ஏ செம்மலை, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

 

a


அன்புமணி பேச முற்பட்டபோது, திடீரென்று கூட்டத்தைப் பிளந்து கொண்டு வந்த ஒருவர், 'அய்யா கடந்த முறை எம்பி ஆக வெற்றி பெற்றீர்கள். எட்டு வழிச்சாலையை எதிர்த்துப் போராடினீங்களே அய்யா... இப்போது அதிமுகவோடு கூட்டணி வெச்சிட்டீங்களே... எட்டுவழிச்சாலைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்கய்யா...,' என்று கூச்சல் போட்டார்.


இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்புமணி, எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தார். ஆனால், எம்எல்ஏ செம்மலை, கேள்வி கேட்ட நபரின் கன்னத்தில் 'பளார் பளார்' என இரண்டு முறை அறைந்தார். மூன்றாவது முறையாக லேசாக கன்னத்தில் தட்டி, 'யாருய்யா நீ... இங்கிருந்து கிளம்பிப் போய்யா,' என்றார். 


இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினர் மற்றும் கட்சியினர் அவரை குண்டுகட்டாக தூக்கிச்சென்று அந்தக் கூட்டத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அதன்பிறகே அன்புமணி பரப்புரையை தொடங்கினார். 

 

s


அந்த நபரை காவல்துறையினர் அழைத்துச்செல்லும்போது கூட, 'அய்யா கேள்விக்கு பதில் சொல்லுங்கய்யா' என்று கூச்சல் போட்டபடியே சென்றார். 


விசாரணையில் அந்த நபர், அக்கரையானூரைச் சேர்ந்த தங்கராஜ் என்கிற செந்தில் என்பதும், அதிமுக தொண்டர் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்