
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இரு நாடுகளுக்கும் போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், தாக்குதல்களை நிறுத்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒப்புகொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை தொடர்ந்து, கடந்த மாலை 5 மணிக்கு இருநாட்டு ராணுவ தளபதி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

முப்படையை சேர்ந்த அதிகாரிகளும் நேற்றும் இன்றும் செய்தியாளர்களைச் சந்தித்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விரிவான விளக்கங்களை அளித்திருந்தனர். 'பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தாக்கும் நோக்கத்தோடு 'ஆபரேஷன் சிந்தூர்' வடிவமைக்கப்பட்டது. தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.நமது நாட்டைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்களும் பொதுமக்களும் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர். எங்கள் சண்டை பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை பயங்கரவாதிகளுடன் மட்டுமே' என விளக்கம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் போர் சூழல் தணிந்து வரும் நிலையில், இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.