Skip to main content

பெண்ணுக்காகப் போதையில் கொலை செய்த நண்பன் தப்பியோட்டம்! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

CUDDLore district youth incident police investigation


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், நேற்று (10/10/2021) நள்ளிரவு அவசர ஊர்தியின் மூலம், 25 வயதுமிக்க அருண்ராஜ் என்பவர் ரத்த வெள்ளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டபோது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

 

இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்தது யார் என்றும், எந்த இடத்தில் இருந்து அழைத்துவரப்பட்டார் என்ற கோணத்திலும் விசாரணையை தொடங்கினர். விசாரணையில்,  விருத்தாச்சலம் அண்ணா நகர் பகுதியிலிருந்து 108 அவசர ஊர்திக்கு விபத்து ஏற்பட்டதாகக் கூறி அழைப்பு வந்தது தெரியவந்தது. அங்குள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் வழிநெடுக ரத்தம் சிதறிக் கிடப்பதும்,  ரத்தம் படிந்த சட்டை கிடைப்பதையும் கண்டறிந்தனர். 

 

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளை சோதனையிட்டபோது திரு.வி.க. நகரைச் சேர்ந்த நபிஸ் என்பவர் தனது மனைவியுடன் வசித்துவந்த வாடகை வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதன் பின்பு 108 அவசர ஊர்திக்கு தொலைபேசி மூலம் அழைத்த விடுத்த நபர் யார் என்றும் நபிஸின் நட்பு வட்டாரங்கள் யாரெல்லாம் என்பது குறித்த விசாரணையில் ஈடுபட்டபோது கத்திக்குத்தில் இறந்த இளைஞர், நபிஸின் நண்பர் அருண்ராஜ் என்பது தெரியவந்தது. 

 

மேலும் இது தொடர்பான விசாரணையில், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆரோக்கியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ், விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்த கலை, வி.என்.ஆர் நகரைச் சேர்ந்த மனோஜ், திரு.வி.க நகரைச் சேர்ந்த நபிஸ், வடலூரைச் சேர்ந்த அப்பு என்கிற பிரேம் ஆகிய 5 இளைஞர்களும்  நண்பர்களாக இருந்துவந்துள்ளனர்.

 

இந்நிலையில், நேற்றிரவு (10/10/2021) அருண்ராஜை தொலைபேசி மூலமாக விருத்தாச்சலத்திற்கு வரவழைத்துள்ளனர். பின்னர் அனைவரும்  ஒன்றாக நபிஸின் வீட்டில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது, பெண் தொடர்பான  பிரச்சினையில் அப்பு என்கிற பிரேம், தனது நன்பனான அருண்ராஜை கத்தியால் குத்தியுள்ளார்.  இதனைப் பார்த்த சக நண்பர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த  அருண்ராஜ்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாக கூறி 108 அவசர ஊர்தியை வரவழைத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது தெரியவந்தது. 

 

அதையடுத்து அப்பு (எ) பிரேம், மனோஜ், கலை ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர். முக்கிய குற்றவாளி நபிஸ் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

மது போதையில் சக நண்பனை கொலை செய்து, 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.