தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று தமிழகத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 68 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 48 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 20 பேரும் இன்று ஒரே நாளில் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு என்பது 2,167 ஆக அதிகரித்துள்ளது. 46 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் கரோனா உயிரிழப்பு பதிவாகி வருகிறது. இன்று கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 4,430 பேர் தமிழகத்திலும் மற்றவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் தமிழகம் வந்தவர்கள். இன்று ஒரே நாளில் 39,715 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 47,340 பேர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல் இன்று ஒரே நாளில் சென்னையில் 1,291 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 12வது நாளாக இரண்டாயிரத்துக்கும் குறைவாக கரோனா பதிவாகி உள்ளது. இதனால் மொத்தமாக சென்னையில் இதுவரை 80,961 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்சமாக சென்னையில் இதுவரை கரோனாவிற்கு 1,318 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 172 பேரும், திருவள்ளூரில் 134 பேரும், காஞ்சிபுரம் 55, மதுரை 129, ராமநாதபுரம் 39, திருவண்ணாமலை 25 பேரும் உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 849 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில் மட்டும் 3,205 பேருக்கு கரோனா ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் 341 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 278 பேருக்கும், செங்கல்பட்டில் 184 பேருக்கும், விருதுநகரில் 175 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.