Skip to main content

வீடு தேடிப்போய் வேலைக்கான ஆர்டரை வழங்கிய கலெக்டர்!! நெகிழ்ந்து கண்ணீர் விட்ட ஏழை மாணவி!!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி. தாய், தந்தை இருவரும் கிடையாது. இவர் தனக்கு கீழ்வுள்ள இரண்டு சகோதரன் - சகோதரியை வளர்க்கும் பொறுப்பு இவருடையதானது. இதனால் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்லத்துவங்கினார். 

 

POOR GIRL

 

இந்நிலையில், சத்துணவு சமையலராக இருந்து பணியின் போது மறைந்த தனது தாயின் வேலையை கருணை அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு சத்துணவு அதிகாரிகளை சந்தித்தார். அவர்களோ உனக்கு 21 வயதானால் தான் வேலைக்கு மனு செய்ய முடியும் என துரத்தியடித்தனர். இதனால் மனம் நொந்துப்போய் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13.08.2018 தேதி அன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்காக அலுவலகத்திற்க்கு வந்து மனு தர வரிசையில் காத்திருந்தார்.

 

 

அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வழியில் நின்றுயிருந்த இவர்களை பார்த்துவிட்டு என்னவென விசாரித்தார். அதன்பின் நடந்தவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அலுவலகத்துக்குள் நுழையும் போது செல்வி.வெ.ஆனந்தி கண்ணீர் நிறைந்த கண்களுடன் வராண்டாவில் என்னை சந்திக்க காத்து கொண்டிருந்தார். அவரை அருகில் அழைத்து எதற்காக இங்கு வந்தாய் என கேட்ட போது, தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இல்லையெனில் நாங்கள் அனைவரும் இறப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியதை கேட்டவுடன் அவரிடம் உனது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் தெரிவித்து எனது அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து உன் குறையை சொல் என்று கேட்ட பிறகு இந்த 19 வயது பெண்ணின் நிலையை கேட்பதற்கு கூட வலிமையான இதயம் வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.

 

poor girl

 

எனக்கு தாய், தந்தை இருந்தார்கள், தற்போது இருவரும் உயிருடன் இல்லை.  எனது உடன்பிறந்த இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரர், வயதான பாட்டி மட்டும் உடன் இருக்கிறார்கள். என்னுடைய தாய் அனிதா, கனிகிலுப்பை அரசு ஆரம்ப பள்ளி சத்துணவு  மையத்தில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தார். எனது தந்தை வெங்கடேசன் உடல்நிலை மிகவும் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், எனது தாயின் வருமானத்தில் மட்டுமே எனது குடும்பம் நடந்து வந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் +2 படிக்கும் போது எனது அம்மா திடீரென இறந்துவிட்டார். எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கிடைக்கப்பெற்ற இறப்புகால பணப்பயன் தொகையினை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தி அவரை காப்பாற்றி வந்தோம். அதன் பிறகு நான், எனது வயதான பாட்டியுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தந்தை, தங்கை மற்றும் தம்பி ஆகியோரை காபாற்றி வந்தேன். ஓராண்டுக்கு முன் 2017-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையும் இறந்து விட்டார். தற்போது எனது பாட்டியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் நான் மட்டுமே விவசாய கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் எனவும், என்னாலும் இப்படிப்பட்ட கடுமையான உடலுழைப்பு வேலைகளை செய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார். 

 

poor girl

 

எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கருணை அடிப்படையில் பணி அளிக்க கோரி மனு அளித்தும், 21 வயதினை நிறைவு செய்த பின்னர் தான் வேலைக்கு தகுதி எனத் தெரிவித்து வேலையும் கொடுக்கவில்லை. எனக்கு 21 வயதாக இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகளும் தொடர்ந்து இந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டால், நாங்கள் உயிருடன் வாழ்வதற்கு வழியில்லை. நான் கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கே பத்தாத நிலையில், நானும் எனது தங்கையும் +2 படித்தாலும் கல்லூரியில் சென்று படிக்க இயலவில்லை. எனது தம்பி மட்டும் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்ற விவரங்களை தெரிவித்தார்.

 

 

இந்த பெண் தனது சூழ்நிலையினை விளக்கியவுடன் அதிகாரிகளை அழைத்து விவரம் கேட்ட போது, இவருக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்கள். இந்த பெண்னிற்கு உடனடியாக வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் வேலை தரும்போது அந்த வேலையை செய்ய அவர்கள் உயிருடன் இருக்கவேண்டும்மே எனச்சொல்லி இதுப்பற்றி சமூக நலத்துறை செயலருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ்நிலையினை விளக்கி இதனை மிகவும் சிறப்பினமாக கருதி அவரின் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியதுடன் அதற்காக முன்மொழிவினையும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றே அப்பெண்னிற்கு இரண்டு மாதம் வரை குடும்ப செலவிற்காக தேவைப்படும் தொகையும் கொடுத்து, அரசு வேலை கிடைக்கும் வரை கூலி வேலைக்கு செல்ல வேண்டாம் இத்தொகையினை கொண்டு எவரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தினை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி, நல்ல எதிர் காலம் உனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையினை தெரிவித்து அனுப்பி வைத்தேன்.

 

 

இந்நிலையில், உடல்நிலை நலிவுற்றிருந்த அவரது பாட்டியும் 24.08.2018 இறந்து விட்டார். இதன் பிறகு, பெற்றோரோ அல்லது பெரியவர்களோ யாரும் இல்லாத இந்த சூழ்நிலை பற்றிய தகவல் வந்தது. உடனே அவர்களை அழைத்து ஆறுதல் கூறினேன். அதோடு ஆனந்தியின் சகோதரி அமுதாவை அலுவலகத்துக்கு நேரில் வரவைத்து உனக்கு நிரந்தரமான வாழ்க்கை வேண்டுமென்றால் கல்லூரி கல்வியினை கட்டாயம் தொடர வேண்டும் என அறிவுறுத்தி, ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் பி.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி படிப்பில் சேர்த்துவிட்டோம், இப்போது கல்லூரியில் படித்து வருகிறார்.  அதேபோல், ஆனந்திக்கும் அண்ணாமலை பல்கலை கழக தொலை தூரக் கல்வியில் 3 ஆண்டு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை அளிக்கப்பட்டு பி.ஏ. தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு சேர்த்து தற்போது படித்து வருகிறார்.

 

poor girl

 

இந்நிலையில் சிறப்பினமாக பெறப்பட்ட அரசாணை அடிப்படையில் இவரை கருணை அடிப்படையில் சமையல் உதவியாளர் பதவிக்கு பதிலாக கல்வித் தகுதியின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் ஆக ஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமன ஆணை அரசு வழங்கியது. அதனை 26.09.2018 வழங்கி, இத்தேதியில் பணியில் சேர்ந்தார். தனது விடாமுயற்சியில் வெற்றி பெற முடியும் என்று எனக்கு பாடம் உணர்த்திய 19 வயது ஆனந்தி நன்றாக வாழ்வார் என்றார். 

 

 

கனிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி , ஆனந்தி வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார். அதோடு, மதிய உணவினை ஆனந்தி, அவரது தங்கை மற்றும் தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டிலேயெ மதிய உணவு எடுத்துக் கொண்டடார். பின்னர் அவர்களுக்காக வாங்கி சென்றுயிருந்த புதிய மிதிவண்டி மற்றும் பழங்களை வழங்கினார். ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் வழங்கி வாழ்த்தினார். 

 

யாரும்மில்லாத அநாதை பிள்ளைகளுக்கு வேலை வாங்கி தந்து, படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கலெக்டரை அவ்வூர் மக்கள் கொண்டாடினார்கள். 

சார்ந்த செய்திகள்