Skip to main content

கல்லூரி தோழியை மறுமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய கேரள இளைஞர் கைது!

Published on 04/08/2019 | Edited on 04/08/2019

கோவை புதூர் பகுதியை சேர்ந்தவர் ரேவதி. ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.  தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன் கோவை புதூர் பகுதியில் பொட்டிக் கடை நடத்தி வந்திருக்கிறார். கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் நடத்திய பொட்டிக் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்திருக்கிறார் ரேவதி. அந்த நேரத்தில் தான் ரேவதியுடன் 15 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஜிதின்ஷா என்பவர்  இன்ஸ்ட்டாகிராம் மூலம் ரேவதியை தொடர்பு கொண்டு தனது நட்பை புதுப்பித்துள்ளார். மன வேதனையில் இருந்த ரேவதியும் தனது குடும்ப சூழ்நிலை, விவாகரத்து வழக்கு, தொழில் நஷ்டம் ஆகியவற்றை ஜித்தின்ஷாவிடம் பகிர்ந்துள்ளார்.

 

 

இதனை தொடர்ந்து இருவரும் தொலைபேசி மூலம் பேசி பழகிய நிலையில், ஜித்தின்ஷா தனக்கு இன்னும் திருமணமாகவில்லை எனவும் ரேவதியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்னர் ரேவதியை கோவைக்கு வந்து நேரில் சந்தித்த ஜித்தின்ஷா திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். ஆனால் ரேவதி ஆரம்பத்தில் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் ஒரு வழியாக ரேவதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த ஜித்தின்ஷா, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் மறுத்த ரேவதி, ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என்று ஜித்தின்ஷாவின் ஆசைக்கு இணங்கி இருக்கிறார். ரேவதியை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்ட ஜித்தின்ஷா, அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்காக ஏஜெண்டிற்கு 10 லட்சம், விசாவிற்கு 2 லட்சம் தேவை என கூறி, ரேவதியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக  7 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொண்டார். ரேவதியின் கிரிடிட் கார்டையும் வாங்கி அதனையும் பயன்படுத்தி வந்துள்ளார். 

 

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து ரேவதிக்கு பேஸ்புக்கில் ஒரு பிரண்ட் ரெக்வஸ்ட் வந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை, அமெரிக்காவில் வசிக்கும் ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கப் என்பவர் தான். ரேவதியை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு தான் தான் ஜித்தின்ஷாவின் மனைவி என்றும், ஜித்தின்ஷா இது போல பல பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும், அவரது நடவடிக்கை பிடிக்காததால் தான் அவரை விட்டு பிரிந்து தனியாக அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற ரேவதி தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.


 

 

Coimbatore college met meet after 15 years ago, kerala younger scam arrested police

 

 

பின்பு ரேவதி இது குறித்து ஜிதின்ஷாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு நேரடியாக வந்து பதில் கூறுவதாக கூறிய ஜிதின்ஷா, கடந்த மாதம் ரேவதியை நேரில் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரேவதி தனது பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்ற ஜித்தின்ஷா, அதன் பின்னர் ரேவதியின் போன் கால்களை எடுக்கவில்லை. பின்னர் மீண்டும் ரேவதியை அமெரிக்காவில் இருந்து தொடர்பு கொண்ட ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கப், ஜித்தின்ஷா பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்பதாகவும், துபாய் செல்ல இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.


இதனை தொடர்ந்து ரேவதி கோவை மாநகர துணை ஆணையர் பாலாஜி சரவணனிடம் புகார் கூறியதை அடுத்து குனியமுத்தூர் போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஜித்தின்ஷா ஆழப்புலாவில் இருந்து பெங்களூருக்கு பேருந்தில் செல்வதாகவும், அங்கிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல இருப்பதாகவும் அமெரிக்காவில் இருந்து ஜித்தின்ஷாவின் மனைவி சின்னுஜேக்கப்,ரேவதிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை ரேவதி குனியமுத்தூர் போலீசாருக்கு தெரிவித்தார் ரேவதி . உஷார் அடைந்த போலீசார், கடந்த புதன்கிழமை காலை மதுக்கரை அருகே காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை வழி மறித்து, அதில் இருந்த ஜித்தின்ஷாவை மடக்கி பிடித்து, அவன் மீது வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை மாலை சிறையில் அடைத்தனர். ஜித்தின்ஷா மீது கொலை மிரட்டல், ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 3  பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

இது குறித்து பேசிய  ரேவதி,கல்லூரியில் 15  ஆண்டுகளுக்கு முன்னர்  தன்னுடன் படித்த கேரளாவை சேர்ந்த ஜித்தின்ஷா, வெளிநாட்டில் வேலை தேடி வருவதாகவும்,  வேலை கிடைத்ததும் இருவரும் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடலாம் என கூறி தன்னை ஏமாற்றி பணம் பறித்து மோசடி செய்து விட்டதாகவும் தெரிவித்தார். ஜித்தின்ஷா தன்னுடைய செல்போனில் இருந்து அவரது மனைவி சின்னுஜேக்கப் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி இருந்ததாகவும், அறிமுகமே இல்லாத ஒருவர் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் முடக்கி இருப்பதை அறிந்த சின்னுஜேக்கப் தன்னை தொடர்பு கொண்ட போது தான், ஜித்தின்ஷாவிற்கு திருமணம் ஆன விஷயமே தெரியும் எனவும் ரேவதி தெரிவித்தார். தன்னை போல் 20 க்கும் மேற்பட்ட பெண்களை ஜிதின்ஷா  ஏமாற்றி பணம் பறித்ததுள்ளதாக தெரிவித்த ரேவதி , தனக்கு முன்னர் ஒரு பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய்  பணத்தை வாங்கி கொண்டு ஜித்தின்ஷா மோசடி செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.



 

 

சார்ந்த செய்திகள்