Skip to main content

தமிழக ஆளுநர் உடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்திப்பு!

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
Chief Secretary Muruganandam meeting with the Governor of Tamil Nadu

தமிழக அரசின் சார்பில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா பொறுப்பு வகித்து வந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டு புதிய தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் நியமிக்கப்பட்டார். அதே சமயம் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1991ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பேட்சை சேர்ந்த முருகானந்தம் தமிழக அரசின் பல முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார். இவர் திருநெல்வேலி சார் ஆட்சியராகத் தனது பணியைத் தொடங்கியவர் ஆவார். கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக இருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு தமிழக நிதித்துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் தனி செயலாளர்களில் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமிழக அரசின் 50வது தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் கடந்த 19ஆம் தேதி (19.08.2024) பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்ற முருகானந்தம் தமிழக ஆளுநர் ரவியைச் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். புதிய தலைமை செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ஆளுநர் ஆர். என். ரவியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

சார்ந்த செய்திகள்