Skip to main content

“கேரளத்தின் சதித் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கக் கூடாது” - அன்புமணி

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
central government should not approve Kerala's conspiracy plan says Anbumani

கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான் என பாமக தலைவர் அன்புமணி கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ள கேரள அரசு, அந்த அணையை கட்டுவதாலும், புதிய அணை கட்டப்பட்ட பிறகு இப்போதுள்ள பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கான வரம்புகளை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம்  விண்ணப்பித்திருக்கிறது. புதிய அணை கட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான கேரள அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போது உள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் அது வலுவிழந்து விட்டதாகவும், அந்த அணை இடிந்தால் அதற்கு கீழ் உள்ள இடுக்கி உள்ளிட்ட  3 அணைகள் கடுமையாக பாதிக்கப்படும்; அதனால் மத்திய கேரளத்தில் பேரழிவு ஏற்படும் என்றும் கேரள அரசு கூறி வருகிறது. இந்தப் பேரழிவைத் தடுக்க புதிய அணையை கட்டுவது மட்டுமே தீர்வு என்று கூறியுள்ள கேரள அரசு, இப்போதுள்ள அணையிலிருந்து 366 மீட்டருக்கு கீழ் புதிய அணை கட்ட தீர்மானித்து அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்து விட்டது. அதன் தொடர்ச்சியாகத் தான் புதிய அணை கட்டுவதாலும், பழைய அணையை இடிப்பதாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதலை கோரியுள்ளது.

கேரள அரசு கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்த இதற்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த சுற்றுச்சூழல் அமைச்சகம், அடுத்தக்கட்டமாக வல்லுனர் குழுவின் ஆய்வுக்காக விண்ணப்பத்தை கடந்த 14&ஆம் தேதி அனுப்பி வைத்தது. அதன் மீது வல்லுனர் குழு வரும் 28&ஆம் தேதி ஆய்வு செய்து தீர்மானிக்க உள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு எதிரான சதித் திட்டமும் ஆகும். இதற்கான கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடக்க நிலையிலேயே தள்ளுபடி செய்யாமல் வல்லுனர் குழுவின் ஆய்வுக்கு அனுப்பியதே தவறு ஆகும். இது 2014&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

முல்லைப் பெரியாற்று அணையின் வலிமை குறித்த வழக்கில் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம்  தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்,‘‘அணை மிகவும் வலிமையாக உள்ளது. அங்கு புதிய அணை கட்டினால் எவ்வளவு வலிமையாக இருக்குமோ, அதைவிடக் கூடுதல் வலிமையுடன் இப்போதைய அணை உள்ளது. எனவே, புதிய அணை தேவையில்லை. மாறாக அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்று ஆணையிட்டது. அதன்படி, அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வரும் கேரள அரசு, இன்னொரு புறம், அணை வலுவிழந்து விட்டதாக நாடகமாடி புதிய அணை கட்ட முயல்வது வாடிக்கையாகிவிட்டது.

முல்லைப்பெரியாற்று அணையின் வலிமை, புதிய அணைக்கான தேவை ஆகியவை குறித்து கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு தனிநபர்களின் பெயர்களில் கேரள அரசின் தூண்டுதலால் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால், அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அதுமட்டுமின்றி, அதன்பின் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவும் அணையை பல முறை ஆய்வு செய்து அது மிகவும் உறுதியாக இருப்பதாக சான்று அளித்தது. ஆனாலும் கூட,  புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு துடிப்பது தவறு; உள்நோக்கம் கொண்டதாகும்.

கேரள அரசின் நோக்கம் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவது அல்ல. மாறாக, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த விடாமல் தடுப்பது தான். முல்லைப்பெரியாறு அணையின் நீர் தேக்கப்பகுதிகளில் ஏராளமான சொகுசு விடுதிகளும், கேரளத்து பிரபலங்களின் மாளிகைகளும் கட்டப்பட்டுள்ளன. அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டால் அவை நீரில் மூழ்கி விடும். அத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கவே இது போன்ற முயற்சிகளை கேரளம் மேற்கொள்கிறது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிரான கேரள அரசின் சதித்திட்டத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்  முக்கிய அம்சங்களையும் உள்வாங்கி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு செவது தொடர்பான கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மாறாக, முல்லைப் பெரியாற்று அணையின் அங்கமான பேபி அணையை வலுப்படுத்தத் தடையாக அப்பகுதியில் உள்ள சுமார் 15 மரங்களை வெட்ட உடனடியாக அனுமதி அளிக்கும்படி கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேரளாவிற்குச் சுற்றுலா சென்ற மாணவர் உயிரிழப்பு; துரை வைகோ எம்பி-யின் துரித நடவடிக்கை!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
tn student who passed away Kerala sent his hometown by action Durai Vaiko

பட்டயக் கணக்காளருக்கு படித்து வரும் மதுரையைச் சேர்ந்த 12 மாணவர்கள் நேற்று(20.6.2024) இரவு கேரளா மாநிலம் வர்காலாவுக்கு சுற்றுலாவாகச் சென்றுள்ளார்கள். 12 பேரில் 7 பேர் மாணவர்கள், 5 பேர் மாணவிகள். பட்டயக் கணக்காளர் படிப்புக்கான இடைநிலை தேர்வை முடித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இன்று(21.6.2024) காலை வர்காலாவில் உள்ள கடலுக்குச் சென்றுள்ளார்கள். கடலில் மாணவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது ரகு என்ற மாணவனை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. பிறகு, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவின் உடல் கரை ஒதுங்கியிருக்கிறது.

ரகுவின் உடலைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக அங்கிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி ரகு உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த  ம.தி.மு.க முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, உடனடியாக திருவனந்தபுரம் ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு பேசினார். ரகுவின் நிலைமையை எடுத்துச் சொல்லி மற்ற மாணவர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளரையும் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று உதவிடுமாறு தெரிவித்து உள்ளார். அவரும் மாணவர்களை பத்திரமாக தமிழகம் அனுப்பும் பணியை ஒருங்கிணைத்து வருகின்றார். துரை வைகோவின் கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக அப்பகுதி வட்டாட்சியரை நேரில் அனுப்பி உள்ளார்.

எதிர்பாராத விதமாக இறந்த ரகுவிற்கு பிரதப் பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், மற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக தமிழகம் அனுப்பி வைக்கவும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியரிடம் துரை வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தமிழக மாணவர்களைப் பத்திரமாக அனுப்பும் பணியில் துரிதமாக செயல்பட்ட திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரின் உதவியாளருக்கும் துரை வைகோ நன்றி தெரிவித்துக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றுள்ள சசி தரூருக்கு துரை வைகோ தனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

Next Story

இந்திரா காந்திக்குப் புகழாரம் சூட்டியதால் சலசலப்பு; சுரேஷ் கோபி விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Explained by Suresh Gopi for Uproar over praise of Indira Gandhi

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்ததன் விளைவால், கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க கால் பதித்தது. 

கேரளாவின் ஒரே ஒரு எம்.பியான சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான கருணாகரனின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் கே.கருணாகரன் ஆகியோர் எனது அரசியல் குருக்கள். இந்திரா காந்தியை இந்தியாவின் தாயாகப் பார்ப்பது போல், கருணாகரனின் மனைவியை நான் அம்மா என்று தான் அழைப்பேன். 

எனது தலைமுறையில் கருணாகரனை, நான் மிகவும் மதிக்கும் துணிச்சலான தலைவர். அதனால், அவர் சார்ந்த கட்சி மீது எனக்கு ஒரு விருப்பம் இருக்கும். ஒரு இந்தியனாக, நாட்டிற்காக நிற்கும் ஒரு மனிதனாக, எனக்கு மிகத் தெளிவான அரசியல் உள்ளது. அதை உடைக்கக் கூடாது. ஆனால் மக்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என் இதயத்திலிருந்து வருகிறது. அதற்கு நீங்கள் அரசியல் சாயம் பூசக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே.கருணாகரன், கேரளாவுக்கு சிறந்த நிர்வாக பலன்களைப் பெற்று தந்துள்ளார்” என்று கூறினார். பா.ஜ.கவைச் சேர்ந்த சுரேஷ் கோபி, காங்கிரஸ் தலைவரையும், இந்திரா காந்தியையும் புகழ்ந்தது, பா.ஜ.கவினரிடையே பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் கோபி கூறிய தனது கருத்துக்கு நேற்று (16-06-24) விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் என்ன சொன்னேன்? காங்கிரஸைப் பொறுத்த வரையில், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கே.கருணாகரன் தான் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தந்தை . இந்தியாவில் அதன் தாய் இந்திரா காந்தி. இதை நான் என் இதயத்திலிருந்து சொன்னேன். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் உண்மையான சிற்பியாக இந்திரா காந்தி இருந்தார். அரசியல் போட்டிகள் கட்சியில் இருக்கிறது என்பதால் நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒருவரை என்னால் மறக்க முடியாது” என்று கூறினார்.