Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
ttk

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் " தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையினால், அப்பகுதியில் காற்று, நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்துள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி முதலே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

 

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ராஜாஜி பூங்காவில் மார்ச் 9 ஆம் தேதி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தோம். இதற்காக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி எங்கள் மனுவை மார்ச் 4 ல் நிராகரித்து விட்டார். இதனால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்த இயலவில்லை. ஆகவே, வரும் மார்ச் 17 மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அதே இடத்தில் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே மார்ச் 17 மாலை ராஜாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.
 

சார்ந்த செய்திகள்