Skip to main content

தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

Buses operated by temporary staff


"அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஒட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட ஊழியர்களுக்குத் தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் சேமிப்பு பணத்தை எடுத்து அரசின் மற்ற நிர்வாகத்திற்குச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காகப் பல கட்டப் போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உரிய நிதி வழங்குவது, மற்ற துறை ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 25ஆம் தேதி முதல் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட 9 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக முன்பே அறிவித்தது. இதையும் தமிழக அரசு பொருட்படுத்தாததால், தொழிற்சங்கங்கள் அறிவித்தபடி 25ஆம் தேதி காலை போராட்டத்தில் குதித்தனர். 

 

மக்கள் மத்தியில் பஸ்கள் முழுமையாக இயக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் இன்றைய தினம் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என அரசு அறிவித்தது. பணிக்கு வராத ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்துக் கழகங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை ஈரோடு காசிபாளையம், அந்தியூர், நம்பியூர், பெருந்துறை, சத்தியமங்கலம், தாளவாடி, பவானி உட்பட 13 பணிமனைகளில் தினமும் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், 60 சதவீதம் வெளி மாவட்டங்களுக்கும், 40 சதவீதம் உள்  மாவட்டத்திற்குள்ளும் இயக்கப்பட்டு வருகின்றன. 

 

இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பஸ்களை இயக்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 25ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள் பெரும்பாலும் இயங்கியது. பெருமளவு பயணிகள் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டனர். ஓடிய பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, "தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த உடனேயே அதற்கான மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்யத் தொடங்கி விட்டோம். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 13 பணிமனைகளில் 720 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை" என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.