சென்னை தி.நகரில் அமைந்துள்ள தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடந்தது. இதில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கலந்துகொண்டார். இக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த பொதுச் செயலாளர் சி.டி.ரவி, “தற்போது பா.ஜ.கவில் படித்தவர்கள், இளைஞர்கள் ஏராளமானோர் இணைந்து வருகின்றனர். மேலும், பா.ஜ.க பெரும் வளர்ச்சி கண்டுவருகிறது. அதனைத் தடுக்கும் வகையில், தமிழ் மொழிக்கு எதிரான கட்சி, இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்சி என தி.மு.க பிரச்சாரம் செய்துவருகிறது. இது முற்றிலும் தவறு.
பா.ஜ.கவின் நிலைப்பாடும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே. தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்துவரும் கட்சி பா.ஜ.க. தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் அதிகம் மதிப்பவர் பிரதமர் மோடி. நிர்மலா சீதாராமன், தமிழிசை சௌந்தரராஜன் என தமிழர்களை மதித்து வாய்ப்பு கொடுத்து வருகிறது பா.ஜ.க. தமிழகத்தின் 234 சட்டபேரவை தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெரும் அளவிற்கு கட்சியைப் பலப்படுத்துவதே எங்கள் நோக்கம்.” என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த எச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.