Skip to main content

“எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது” - அரவிந்த் கெஜ்ரிவால்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

Arvind Kejriwal and Mallikarjun Kharge condemned for enforcement raid

 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மத்திய காவல் படையினருடன் பொன்முடி வீட்டில் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது சென்னை வீடு, அலுவலகம், விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சரின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பியுமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறையின் இந்த சோதனைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே, தனது ட்விட்டர் பக்கத்தில், “அமலாக்கத்துறை சோதனை மூலம் எதிர்க்கட்சிகளிடையே பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது; பிரதமர் மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றுபட்டுள்ளன; ஜனநாயகத்தை மதித்து கோழைத்தனமான தந்திரங்களை பாஜக, அரசு கையாள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அமலாக்கத்துறை மூலம் கட்சிகளை உடைக்கவும், எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் பாஜக முயற்சிக்கிறது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களை மட்டும் அமலாக்கத்துறை விட்டுவிட்டது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்