Skip to main content

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கனவாகவே இருக்கும்” - அண்ணாமலை

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

annamalai says oppostion party allaince related

 

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

 

இதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இங்கிலாந்தில் உள்ள தமிழர்களை சந்திக்க உள்ளேன். அதற்காக 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 மாத காலமாக ஒன்றிணைவோம் என்று பேசி வருகிறார். முதல்வருக்கு தெரியும் அவருடைய ஆட்சியில் மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று, மக்கள் திமுக ஆட்சியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. 2024ல் திமுக கூட்டணி எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதனை மறைப்பதற்காக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முதல்வர் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

 

அதற்கு சாட்சியாக திருவாரூரில் நடந்த நிகழ்ச்சியே சாட்சி. முதலில் குடியரசுத் தலைவர் வருவதாக இருந்தது. பின்னர் அவர் வரவில்லை. அதன் பிறகு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வருவதாக இருந்தது. அவரும் வரவில்லை. இதையடுத்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை அழைத்து கலைஞர் கோட்டத்தை திறந்திருக்கிறார்கள். நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சிக்கு வராதது தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதில் தோல்வி அடைந்ததற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது கனவாகவே இருக்கும். பாஜக எதிர்ப்பு என்பது அரசியல்வாதிகளின் பேசுபொருளாக மட்டுமே இருக்கும். மக்கள் பாஜகவை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். 400 எம்பிக்கள் வெற்றி பெற்று மோடி 3வது முறையாக பிரதமராக வருவார். தமிழகத்தில் கூட பாஜகவிற்கு 39 எம்பிக்கள் கிடைப்பார்கள்.

 

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும்போது அவரைப் பற்றி பேச விரும்பவில்லை. செந்தில் பாலாஜி கைது முதல் தற்போது வரை நடைபெற்ற செயல்கள் நம்பிக்கை கொடுப்பதாக இல்லை.  தமிழக மனித உரிமை ஆணையம் கிட்டத்தட்ட திமுகவின் நீட்டிக்கப்பட்ட கிளையாக தான் செயல்படுவதாக தெரிகிறது. இந்த ஆணையம் நடுநிலைமையுடனும் நடந்து கொள்ளவில்லை. அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு இல்லை என்று கூறி அமைச்சர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார். இந்நிலையில் பொதுமக்கள் எப்படி நம்பி அரசு மருத்துவமனைக்கு செல்வார்கள். தமிழகத்தில் மிகச் சிறந்த மருத்துவமனையான ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்றால் தினமும் சிகிச்சை பெறும் லட்சக்கணக்கான மக்களின் கதி என்ன”  எனக் கேள்வி எழுப்பினார். 

 

 

சார்ந்த செய்திகள்