Skip to main content

பாஜக பிடியில் இருந்து அதிமுகவால் மீளவே முடியாது! முத்தரசன் தாக்கு!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
AIADMK can never recover from BJP grip! Mutharasan attack

 

 

அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார் என்றும், பாஜக பிடியில் இருந்து இனி அதிமுகவால் மீளவே முடியாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் வியாழக்கிழமை (ஆக. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

 

“நாடு முழுவதும் கரோனா பாதிப்புக்குள்ளாக மத்திய பாஜக அரசுதான் காரணம். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு கரோனா பரவும் அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அப்போதே இந்தியாவில் விமான போக்குவரத்தை தடை செய்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

 

கரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பாஜக அரசு, தனது ஆர்எஸ்எஸ், மனுதர்ம கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளை பாதிப்படையச் செய்திருக்கிறது.

 

தமிழக முதல்வரும் மின்சார திருத்த சட்டத்தில் விதிவிலக்குதான் கேட்கிறாரே தவிர, ரத்து செய்யும்படி கோரவில்லை. தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனே சட்டமன்றத்தை கூட்டி, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

 

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு, தமி-ழக நலன்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து வருகிறது. பாஜக என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. இப்போது தலை மட்டும்தான் லேசாக தெரிகிறது. அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.

 

திமுக தலைமையில் அமைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி, கொள்கை ரீதியானது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடுகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

 

திமுகவுக்கு பாஜக போட்டி என்பதும் பகல் கனவு. பாஜகவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்றவர்களால் எல்லாம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது. அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார்.

 

வரும் 15ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவார். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார். மக்கள் இ-பாஸ் நடைமுறையால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அதனால் இ&பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.