Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Adjournment of case against Minister Senthil Balaji

 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அதேநேரம் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கை மூன்றாவதாக உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

 

இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தை முன்வைக்கையில், “செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை நீதிமன்றக் காவல் காலமாகக் கருத முடியாது. அமலாக்கத்துறையினர் கைது செய்யலாம், காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என இரு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்” என வாதத்தை முன்வைத்தார்.  

 

அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன்வைக்கையில், “ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, “யாரும் ஆவணங்களைப் பார்க்காத நிலையில் கைதுக்கான காரணம் திருத்தப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. வழக்கு விசாரணையை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். 

 

அதன்படி செந்தில் பாலாஜி வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் காணொளி வாயிலாக ஆஜராகி தனது தரப்பு வாதத்தை விரிவாக முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதத்தை முன்வைத்து வந்தார். செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நேற்று நிறைவடையாததைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதி இன்றைக்கு ஒத்தி வைத்தார். 

 

Adjournment of case against Minister Senthil Balaji

 

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகி சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தில் கைது செய்யப்படுவதற்கான காரணங்களை முன்வைத்து வாதங்களை முன்வைக்கையில், “23 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்தியாவும் கையெழுத்திட்டு இருந்தது. மேலும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின்படி புலன்விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமையாகும்.

 

காவலில் எடுத்து விசாரிக்க சட்டம் அனுமதிக்காவிட்டாலும் புலன்விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமையாகும். குற்றத்தைக் கண்டுபிடிக்க சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்க, சோதனை செய்ய அதிகாரம் உள்ளது. சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் புகார் வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க முடியாது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறைக்கு புலன்விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும். ஆதாரங்கள் சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன்விசாரணை நடவடிக்கைதான்.

 

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச்சட்ட குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். கடந்த 18 ஆண்டுகளில் அமலாக்கத்துறையினரால் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதனால் அமலாக்கத்துறை விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூற முடியாது.  அமலாக்கத்துறை தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பு. எனவே அமலாக்கத்துறைக்கு புலன்விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது. அதே வேளையில் தவறான விசாரணை என்றால் விசாரணை அதிகாரிக்குத் தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது” என அமலாக்கத்துறை தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

 

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். ஆட்கொணர்வு மனுவின் மீதான இந்த விசாரணை வரும் ஜூலை 14 ஆம் தேதி முடிவுக்கு வரும் என நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்