Skip to main content

அமலாபாலிடம் ஆபாசமாகப் பேசிய விவகாரம்! -வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாக நடிகை அமலா பால் கடந்த ஆண்டு சென்னை  மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், அவரையும் காவல்துறை கைது செய்தது. இவர்கள் இருவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ACTRESS AMALAPAUL CASE  CHENNAI HIGH COURT

இந்த நிலையில் நடிகை அமலாபால் அளித்த பொய்ப் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்