Skip to main content

காதலியை கொடூரமாக கொலை செய்த 58 வயது காதலன் - அதிர்ச்சிகுள்ளான காவல்துறையினர்!

Published on 26/08/2021 | Edited on 26/08/2021
58-year-old boyfriend misbehaved with girlfriend

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சேமங்கலம். இப்பகுதியில் உள்ள மலட்டாறு காட்டுப் பகுதியில் கடந்த 4ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டி குப்பத்தைச் சேர்ந்த 58 வயது ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கூரியர் அலுவலகத்தில் காவலராக வேலை பார்த்து வருவதாகவும், இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ரெட்டி குப்பத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் நாவல் மருதூரை சேர்ந்த 51 வயது ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். ஜெயலட்சுமியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனிமையில் இருந்த ஜெயலட்சுமி சென்னையில் மாம்பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

 

இதனால் ஏழுமலை ஜெயலட்சுமி இருவரும் சென்னையில் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். மேலும் சென்னையிலுள்ள கண்ணம்மா பேட்டை பகுதியில் ஜெயலட்சுமியும் ஏழுமலையும் தனி வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்,  “தனக்கு தெரியாமல் ஜெயலட்சுமி வேறு ஒரு நபருடன் மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதனால்  தனக்கும் ஜெயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அதே போல் ஜெயலட்சுமி எனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். அதனால் ஜெயலட்சுமியை கொலை செய்வது என திட்டமிட்டேன். அதன்படி கடந்த 3ஆம் தேதி பண்ருட்டி அருகில் உள்ள திருத்துறையூர் கிராமத்தில் எனது மாமனார் இறந்து போனார் அவரது கரும காரியத்திற்கு செல்ல வேண்டும் என ஜெயலட்சுமியிடம் பொய் கூறி ஏமாற்றி  சென்னையில் இருந்து பஸ் மூலம் அவரை அழைத்து வந்தேன். அரசூர் பஸ் நிலையத்தில் இருவரும் இறங்கினோம் அங்கிருந்து மலட்டாறு வழியாக நடந்து சென்றோம்.

 

அப்படி செல்லும் போது காட்டுப்பகுதியில் ஜெயலட்சுமிக்கு தெரியாதவாறு அவரது பின்புறமிருந்து மரக்கட்டையால் அவரது மண்டையில் தாக்கினேன். பின்னர் கையில் வைத்திருந்த இரும்பு உளியால் அவரது வயிற்றில் குத்தியதில் ஜெயலட்சுமி மயங்கி கீழே விழுந்து இறந்தார். அங்கு கிடந்த பனமட்டை மற்றும் விரகுகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீவைத்தேன். பிறகு அவர் வைத்திருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்” இவ்வாறு போலீசாரிடம் ஏழுமலை வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஏழுமலை மறைத்து வைத்திருந்த அந்த மரக்கட்டை, இரும்பு உளி மற்றும் ஜெயலட்சுமி வைத்திருந்த செல்போன் சிம்கார்டு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயோடு நீச்சல் பழகிய குழந்தைகள்; 3 பேர் உயிரிழப்பு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Children who swim with their mother; 3 people lost their lives

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பிச்சநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40.) இவரது மனைவி பவித்ரா (30). இத்தம்பதியினரின் மகன் ரித்திக் (9),மகள் நித்திகா ஸ்ரீ (7). தற்போது கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர். பவித்ரா தினமும் தனது பிள்ளைகளை அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று, நீச்சல் பழக கற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இன்று பவித்ரா தனது பிள்ளைகளுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். குளிக்கப்போனவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடத்துவங்கினர். அப்போது சிறுமி நித்திகாஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பங்குப்பம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு கிணற்றில் சடலமாக கிடந்த மூன்று பேரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தாய் உட்பட 3 பேரும் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என முதல் கட்டமாகக் கூறப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.