Skip to main content

"ஹலோ... எனக்கு ஒரு குழந்தை வேணும்" - செவிலியருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஃபோன் கால்!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

4 people arrested in erode in child case

 

ஈரோடு, அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் துணை கிராம சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் செவிலியர் அகிலா என்பவருக்கு செல்ஃபோனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய ஒரு பெண், தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால் தெரிவிக்கவும் எனக் கூறியிருக்கிறார். 
 

மேலும், சட்டப்பிரச்சனை ஏதும் இல்லாத வகையில், வக்கீலுடன் வந்து குழந்தையைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறி உள்ளார். இதில் சந்தேகமடைந்த செவிலியர் அகிலா, இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பிறகு கருங்கல்பாளையம் போலீசில் இது சம்பந்தமாகப் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரின் ஆலோசனைப்படி, அந்தப் பெண்ணிடம் செல்ஃபோனில் பேசிய செவிலியர் அகிலா, நீங்கள் கேட்பது போன்று ஒரு குழந்தை உள்ளது, வந்தால் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியிருக்கிறார்.

 

4 people arrested in erode in child case


இதைத் தொடர்ந்து குழந்தையை வாங்குவதற்காக 3 பெண்கள், 1 ஆண் என நான்கு பேர் வந்தனர். அவர்களைப் பிடித்த கருங்கல்பாளையம் போலீசார், விசாரணை செய்தனர். பிறகு போலீசார் விசாரணையில், பிடிபட்ட அவர்கள் கோவையைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலத்தைச் சேர்ந்த கோகிலா, மோகனபிரியா மற்றும் பள்ளி பாளையத்தைச் சேர்ந்த நந்தகுமார் எனத் தெரியவந்தது. 

 

4 people arrested in erode in child case


போலீசின் தொடர் விசாரணையில், இந்த நான்கு பேருக்கும் ஏற்கனவே குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பவானி லட்சுமி நகரைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண் குழந்தை வேண்டும் என்று கேட்டது உறுதியானது. ஆனால், அந்தப் பெண்ணுக்கும் 15 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்ததுள்ளது. தற்போது அந்தப் சண்முகப்பிரியா தலைமறைவாகிவிட்டார். அவர் பிடிபட்டால் மட்டுமே குழந்தை யாருக்காகக் கேட்கப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? இவர்களுக்கும் குழந்தை கடத்தல் கும்பலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நான்குபேரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சண்முக பிரியாவை தேடி வருகின்றனர்.


இந்தக் குழுவினர் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வாங்கித் தருபவர்களா? அல்லது திருட்டுத்தனமாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபடுபவர்களா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.