Skip to main content

304 நாட்களைக் கடந்த வேங்கைவயல் விவகாரம்; 7வது முறையாக அவகாசம் கேட்கும் சிபிசிஐடி

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

304 days past the vengaivayal issue; CBCID seeking time for 7th time

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்தச் சம்பவத்தில் இதுவரை 4 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 12.10.2023 அன்று ஒரு சிறுவன் உட்பட 4 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் மூலம் வேங்கை வயல் விவகாரத்தில் இதுவரை 5 சிறுவர்கள் உட்பட 30 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 221 பேரிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.

 

இந்த சம்பவம் நடந்து 304 நாட்கள் கடந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை 284 நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத கால அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிமன்றம், கால அவகாசம் கொடுத்து அனுமதி அளித்தது. 

 

ஏற்கனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 6 முறை அவகாசம் கேட்டு அனுமதி பெற்ற நிலையில், தற்பொழுது  ஏழாவது முறையாக அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடநாடு வழக்கு. மேலும் 4 பேருக்கு சம்மன்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 The Kodanadu case. Summons for 4 others

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தலைமையில் நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிபுணர் குழு அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்கு அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும் போதெல்லாம் அவருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Rs. 4 crore confiscation issue; CBCID case registration

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் கடந்த 23 ஆம் தேதி (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இது குறித்து நயினார் நாகேந்திரன் சென்னை தியாகராயர் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேற்று (28.04.2024) கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Rs. 4 crore confiscation issue; CBCID case registration

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இந்த வழக்கில் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. விரைவில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.