சேலம் அருகே, 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கூலித் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், மல்லூர், ஏர்வாடி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் திருமலை (41). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மல்லூர் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர், கடந்த 2020 ஆம் ஆண்டு திருமலை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிந்ததை அடுத்து ஜூன் 26 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. திருமலைக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுதா ஆஜராகி வாதாடினார்.