Skip to main content

“ராகுல்காந்தி தவறி விழுந்திருப்பார்; தள்ளிவிட்டதாக சித்தரித்துவிட்டனர்” -அரசியல் லாபம் தேடுவதாக காங்கிரஸ் மீது கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கு!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Rajenthirabalaji speech about rahul gandhi's uttarpradhesh march

 

 

ஸ்ரீவில்லிபுத்தூரில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

“மு.க.ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார்; கடையைத் திறப்பார். திமுக ஆட்சியில் நடந்த அக்கிரமம், விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்கவேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நன்மை செய்யப்பட்டுள்ளது. குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பிக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது. ஏழை விவசாயிகளுக்கு,  பாட்டாளிகள்,  படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி.  முதல்வர்  எடப்பாடி பழனிசாமியின் புகழை கெடுப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அவருடைய முயற்சி ஒருகாலும் பலிக்காது. அவரது முயற்சி காணல் நீராகத்தான் போகும். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தெளிவான ஆட்சி, வலுவான ஆட்சி, வல்லமையான ஆட்சி,  பொலிவான ஆட்சி, சிறப்பான ஆட்சி என்று மக்களால் போற்றப்படும் ஆட்சி. இந்த ஆட்சி, எந்தவிதமான வில்லங்கமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும். 

 

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியைச் சுடவேண்டும். உத்தரபிரதேசத்தில் சிறுமி உயிரிழந்தது தொடர்பாக,  காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல் காந்தி அங்கு சென்று வம்பு இழுக்கக்கூடாது. காவல்துறையினர் ராகுல் காந்தியை தடுத்து  இருப்பார்கள்;  தள்ளிவிட வாய்ப்பில்லை.  அவர்  தவறி விழுந்திருக்கலாம். பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி. அவரும் உத்தரப்பிரதேச முதல்வரும்,  ராகுல் காந்தியை தள்ளி விடுவது போன்ற ஈனத்தனமான செயலை செய்திருக்க மாட்டார்கள். நடந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டதாகவே தெரிகிறது. உண்மைக்கு புறம்பான சம்பவமாகவும் தெரிகிறது. இதை வைத்து ஈனத்தனமான அரசியல் நடத்தி லாபம்  தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பானது,  பிழைப்பை கெடுக்கும்.

 

வரும் 6-ஆம்  தேதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அதிமுக தலைமை அவசர அழைப்பு ஒன்றும் விடுக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பணி இருக்கிறது என்று கூறினால் கூட்டத்திற்கு செல்லாமல்  இருந்து கொள்ளலாம். அதிமுகவை சுற்றி என்னதான் மாவாட்ட நினைத்தாலும் ஒன்றும் நடக்காது. அதிமுக என்பது கடல்போல் பொங்கத்தான் செய்யும்.  கடைசியில் அமைதியாகிவிடும். 

 

துணை முதல்வரைப் புறக்கணிக்கவில்லை பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதிமுக மிகப்பெரிய ஆலமரம். அதில் விழுதுகள் பல இருக்கும் அதில் எந்த விழுது பெரியது, எந்த விழுது சிறியது? எனப் பார்க்க முடியாது.  அனைத்துமே பெரிய விழுதுதான் அனைத்துமே உறுதியானவைதான். அதிமுகவை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். ஸ்டாலின் எண்ணங்களைத் தவிடு பொடியாக்கி, வெற்றி இலக்கை நோக்கி அதிமுக செல்கிறது. அதிமுக வாழும்; நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்”  என்று பேட்டியளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்