Skip to main content

பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி; தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை ஏற்க முடியாது... ராமதாஸ்

Published on 30/09/2019 | Edited on 30/09/2019


 

pmk ramadoss



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550 ஆவது பிறந்த நாளையொட்டி, 550 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங்கின் படுகொலை வழக்கில் பயங்கரவாதி பல்வந்த் சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படிருப்பதுடன், 25 முதல் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 8 பயங்கரவாதிகளை விடுதலை செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
 

குருநானக்கின் 550-ஆவது பிறந்தநாளையொட்டி, 550 பேர் விடுதலை செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். தமிழகத்திலும் பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் பிறந்தநாள்களையொட்டி  இவ்வாறு ஏராளமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மீதமுள்ள 9 பயங்கரவாதிகள் தொடர்பான முடிவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள பல்வந்த் சிங் ரஜோனா பஞ்சாப் முதல்வர் பியாந்த்சிங் படுகொலை வழக்கில் முதன்மை குற்றவாளியாவார்.
 

பஞ்சாபில் பயங்கரவாதத்தை ஒழிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பியாந்த்சிங் 31.08.1995 அன்று சண்டிகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணிகளை முடித்துக் கொண்டு மகிழுந்தில் ஏற முயன்ற போது, பாபர்கல்சா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த  தில்வார் சிங் என்பவர் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒருவேளை தில்வார் சிங்கின் உடலில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்காமல் போயிருந்தால், இரண்டாவது மனிதகுண்டாக செயல்பட பல்வந்த் சிங் தயாராக இருந்தார். வழக்கு விசாரணையின் போது தம்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதுடன், அதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட போதும் கூட, அதை குறைக்க வேண்டும் என்று கருணை மனுவை அவர் தாக்கல் செய்யவில்லை.


 

2012-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் பாதல் கொடுத்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் அளித்த மனுவின் அடிப்படையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தபோது பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக, பல்வேறு மாநில சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 8 பயங்கரவாதிகள் குருநானக்கின் பிறந்தநாளான நவம்பர் 29-ஆம் தேதி விடுதலை செய்யப்படவுள்ளனர். பல்வந்த் சிங்கும் அதேநாளில் விடுதலையாக வாய்ப்புள்ளது.
 

பல்வந்த்சிங் உள்ளிட்ட 9 பேரும் தடா சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விடுதலைக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அவர்களின் விடுதலைக்காக பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கடந்த 14-ஆம் தேதி விண்ணப்பித்தார். அடுத்த 14 நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. ஆனால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர் விடுதலை பற்றி 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிவித்த போது, அதுகுறித்து தமிழக அரசிடம் கருத்து தெரிவிக்க வேண்டிய மத்திய அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு சென்று விடுதலைக்கு தடை வாங்குகிறது.
 

தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெறப்பட்டது. அதனடிப்படையில், 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி அமைச்சரவை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்து இன்றுடன் 387 நாட்கள் ஆகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பஞ்சாப் மாநில அரசு அளித்த பரிந்துரை மீது 14 நாட்களில் மத்திய அரசு முடிவு எடுக்கிறது; தமிழர்கள் விடுதலை விஷயத்தில் 13 மாதங்களாகியும் இன்று வரை ஆளுனர் முடிவு எடுக்கவில்லை என்றால் அது எந்த வகையில் நியாயம்? இது கடுமையான இனப்பாகுபாடு அல்லவா?


 

இத்தனைக்கும் பல்வந்த்சிங் ரஜோனா பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங் படுகொலையில் தமக்குரிய பங்கை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை பெருமையாக கருதுவதாகவும் கூறியிருக்கிறார். மற்றவர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது மட்டுமின்றி தங்களை பயங்கரவாதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள். மாறாக பேரறிவாளன் காவல்துறை அதிகாரியால் திரித்து எழுதப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டவர். மற்றவர்களும் ராஜிவ் கொலை வழக்கில் தெரிந்து எந்த தவறையும் செய்யாதவர்கள். பஞ்சாபில் காங்கிரஸ் முதலமைச்சரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்ய  காங்கிரஸ் அரசே பரிந்துரைக்கிறது; மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறது. ஆனால், பேரறிவாளன் குற்றமற்றவர் என புலனாய்வு அதிகாரியும், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதியும் கூறிய பிறகும், 29 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த அவரும், மற்றவர்களும்  விடுவிக்கப்படவில்லை என்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற தத்துவத்தை ஏற்க முடியவில்லை.
 

ஏற்கனவே கருணை அடிப்படையில் விடுதலை செய்வதில் நடிகர் சஞ்சய்தத்துக்கு காட்டப்பட்ட சலுகை 7 தமிழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இப்போது  பஞ்சாபியர்களுக்கு ஒரு நீதி; தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் மகாத்மா காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாளில் விடுதலை செய்வதற்கு ஆளுனர் ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.