Skip to main content

மக்கள் நீதி மய்யத்தில் கமலின் அதிரடி அறிவிப்பு! தொண்டர்கள் மகிழ்ச்சி! 

Published on 14/08/2019 | Edited on 14/08/2019

நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் புது வாக்காளர்களை பெருமளவு கவர்ந்தது. நகர்ப்புற பகுதியில் மக்கள் நீதி மய்யத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதோடு மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று மூன்றம் இடம் பிடித்தது. அதே போல் கிராமசபை கூட்டம் நடத்தி கிராமப்புற பகுதிகளிலும் கட்சியை கொண்டு சேர்த்தனர். இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற சில வியூகங்களை வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.   
 

mnm



இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசியல் மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும், தன் பாரம்பரிய பெருமைகளை இழந்து நின்ற ஒரு சூழலில், அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும், மீண்டும் மக்களுக்காகப் பாடுபடும் ஒரு அரசியல் கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்கின்ற எண்ணத்திலும், என்னால் ஆரம்பிக்கப்பட்டது தான் மக்கள் நீதி மய்யம் கட்சி அதன் காரணமாகவே நமது கட்சி, ஆரம்பித்த 14 மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தலை துணிவுடன் சந்தித்தது. அனைத்துத் தரப்பினரும் ஒத்துக்கொள்ளும் வகையிலான பெரும் ஆதரவை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்கள் அளித்தனர்.அந்த ஆதரவை மேலும் அதிகப்படுத்தி, வரும் 2021ல் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபடுவதென்று முடிவு செய்து, நமது கட்சியை வலுப்படுத்தும் சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு விரும்பினேன். 
 

mnm



தமிழகத்தின் ஒவ்வொரு வாக்காளரையும், கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் நேரடியாக சந்திக்கும் வண்ணம் கட்சி நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்தேன். அந்த வகையில் நமது கட்சி, தலைவரின் கீழ் துணைத்தலைவர், ஆறு பொதுச்செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வண்ணம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் வரை சென்றடையப் பொதுச்செயலாளர் அமைப்பு - வடக்கு மற்றும் கிழக்கு & தெற்கு மற்றும் மேற்கு என்று இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச்சாவடி வரை சென்றடையப் பொதுச்செயலாளர் - ஒருங்கிணைப்பு என்கின்ற பதவி உருவாக்கப்படுகிறது. இத்துடன் பொதுச்செயலாளர் - கொள்கை பரப்பு, பொதுச்செயலாளர் - சார்பு அணிகள், பொதுச்செயலாளர் - தலைவர் அலுவலகம் என்றும் ஏற்படுத்தப்படுகிறது. 


மேலும் தமிழகம் முழுக்க கட்சி நிர்வாகத்தினை எளிமைப்படுத்திடும் வகையில், சென்னை , காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி என்று 8 மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.  புதிதாக நியமிக்கப்படும் மாநிலச் செயலாளர்கள் அந்தந்த மண்டலத்தைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி, பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பு பதவிக்கு அருணாச்சலம், பொதுச்செயலாளர் அமைப்பு பதவிக்கு மெளரியா, மற்றொரு பொதுச்செயலாளர் அமைப்பு பதவியை தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வை கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுச்செயலாளர் கொள்கை பரப்பு பதவிக்கு ரங்கராஜன், பொதுச்செயலாளர் சார்பு அணிகள் பதவிக்கு உமா தேவி மற்றும் பொதுச் செயலாளர் தலைவர் அலுவலகம் பதவிக்கு பஷீர் அகமது ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேலையை இப்போது இருந்தே கமல் தீவிரமாக இறங்கிவிட்டதாக சொல்கின்றனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.