Skip to main content

அன்புமணி ஒன்றும் அமுல் பேபி அல்ல... கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது! பாமகவுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்!!

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
K.Balakrishnan

 

 

 

பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என பாமக தலைவர் கோ.க.மணிக்கு கே.பாலகிருஷ்ணன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக அரசும் வழக்கு தொடுத்துள்ள போது, பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் 27 சதமான இட ஒதுக்கீடு போதும் என மனு செய்திருப்பது ஏன்?, இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது ஆகாதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேள்வி எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக தலைவர் கோ.க. மணி விரிவான அறிக்கையை அளித்திருக்கிறார். “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்கிற்கு விலை சொல்வது போலத் தான்” அவருடைய பதில் அறிக்கை அமைந்துள்ளது. பாமக அளித்துள்ள விளக்கங்கள் நீதிமன்றத்தில் பாஜக அரசின் வாக்குமூலத்திற்கு வக்காலத்து வாங்குவதைப் போல உள்ளது வேதனையளிக்கிறது.

 

 

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி கடிதம் எழுதியதாகவும், அதற்கு பதில் எழுதிய மத்திய அமைச்சர் சலோனி குமார் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தினால்தான் இட ஒதுக்கீடு வழங்க முடியவில்லை என பதில் எழுதியுள்ளதாகவும், இதனால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் தனது அறிக்கையில் கோ.க.மணி தெரிவித்துள்ளார். இந்த இட்டுக்கட்டிய கதையை எப்படி ஏற்றுக்கொள்வது? ஒருவேளை மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் எழுதியது உண்மையெனில், முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி என்ன செய்திருக்க வேண்டும்? சலோனிகுமார் வழக்கிற்கும், தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வழங்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போடவேண்டாம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனை இடித்துரைத்திருக்க வேண்டாமா?.


சலோனிகுமார் வழக்கையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடஒதுக்கீடு தொடர்பான வழக்கையும் மையமாகக்கொண்டு டி.கே.பாபு என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 13.07.2020 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சலோனி குமார் வழக்கிற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதமான இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உயர்நீதிமன்றமே விசாரித்து உரிய தீர்ப்புகளை வழங்கிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமல் மத்திய அமைச்சர் கூறினார் என்பதால் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் அன்புமணி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாராம். அவர் ஒன்றும் அமுல் பேபி அல்லவே!.


மேலும் 27 சதமான இடஒதுக்கீடு வழக்கினை டாக்டர் அன்புமணி தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக அரசும் பிரதான எதிர்க்கட்சிகளும் 50 சதமான இடஒதுக்கீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தாக்கல் செய்த காரணத்தால் ஆத்திரமடைந்து நீதிபதிகள் இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர் என்றும், இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யாமல் இருந்திருந்தால், டாக்டர் அன்புமணி கோரிய அடிப்படையில் 27 சதமான இட ஒதுக்கீடு இந்நேரம் கிடைத்திருக்கும் என கூறியுள்ளார். ஏதோ எதிர்க்கட்சிகள் வழக்கு தாக்கல் செய்த  காரணத்தால்தான் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போனதாக ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார். உண்மை என்னவெனில், சலோனிகுமார் என்பவர் 27 சதமான இடஒதுக்கீட்டை அமலாக்க வேண்டுமென கடந்த 2015 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ளது. இன்னமும் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை விசாரித்து முடிக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க எதிர்க்கட்சிகள் வழக்கு தாக்கல் செய்த காரணத்தால்தான் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை என அபாண்டமாக அறிக்கை விடுவது நியாயமா?.

 

1998 முதல்  2009 ஆம் ஆண்டு வரை சுமார் 11 ஆண்டுகள் பா.ம.க சார்பில்  திருவாளர்கள் தலித் எழில்மலை, என்.டி.சண்முகம், டாக்டர் அன்புமணி ஆகியோர் மத்திய அமைச்சர்களாக இருந்துள்ளனர். அதிலும் டாக்டர் அன்புமணி மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்துள்ளார். திரு. கோ.க.மணி அவர்கள் நீட்டி முழக்கி அறிக்கை விடுவதற்கு மாறாக மத்திய அமைச்சரவையில் பா.ம.கவினரும், அன்புமணியும் இடம் பெற்றிருந்த காலத்தில் பிற்படுத்தபட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றுத்தர என்ன நடவடிக்கையை மேற்கொண்டனர் என ஒரே வார்த்தையில் சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு தமிழகத்திற்கு தேவையான இடஒதுக்கீட்டை பெற்றிருக்கமுடியும். இந்த காலம் முழுவதும் பாமகவினர் மத்திய அமைச்சர் பதவி சுகத்தை அனுபவித்தனரே தவிர, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை. அதிகாரத்தில் இருந்த போது இதை செய்ய மறுத்துவிட்டு, இப்போது, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி இட ஒதுக்கீடு கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறுவது அழகல்லவே! இத்தோடு நின்றாலும் பரவாயில்லை, மேலும் ஒருபடி சென்று 2009 ஆம்  ஆண்டுக்கு பின்னர் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரவையில் இல்லை, இருந்திருப்பாரேயானால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருப்பார் என கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியுள்ளார். பதவியில் இருந்தபோது டாக்டர் அன்புமணி அதைச் செய்ய தவறிவிட்டார் என்று மறைமுகமாக இடித்துக்காட்டியுள்ளார் போலும். 

 

அபயநாத்  வழக்கு விசாரனைக்கு வந்தபோது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியின்  ஆலோசனையின் அடிப்படையில்தான் பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என சுகாதார துறையின் சார்பில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்ததாகவும், இதை ஏற்றுக்கொண்டுதான் உச்சநீதிமன்றம் இம்மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பு வழங்கியதாகவும் போகிறபோக்கில் கோ.க.மணி அள்ளிவிட்டுள்ளார். மத்திய நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டத்தை 2006 ஆம் ஆண்டே மத்திய அரசு நிறைவேற்றிவிட்டது. இந்த அடிப்படையில்தான் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென அபயநாத் வழக்கு தொடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிய பிறகு நீதிமன்றத்தில் அதன் அடிப்படையில்தான்  வாக்குமூலம் அளித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் அன்புமணியின் தனிப்பட்ட செல்வாக்கு ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. வாதத்திற்காக அன்புமணியின் செல்வாக்கினால்தான் மத்திய சுகாதாரத்துறை மேற்கண்ட வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்றால், அதே சுகாதாரத்துறையின் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கலாம் என வாக்குமூலம் தாக்கல் செய்ய அன்புமணி பணித்திருக்கலாமே. அவ்வாறு செய்திருந்தால் பிரச்சனை அன்றே முடிவுக்கு வந்திருக்குமே! ஏன் இதைச் செய்யவில்லை என்ற உண்மையை இப்போதாவது கோ.க.மணி விளக்க வேண்டும்.\

 

gkmani

 

கோ.க.மணி தனது அறிக்கையில் இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்ட அடிப்படையில்தான் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அகில இந்திய ஒதுக்கீடு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவதால், மத்திய அரசு இடஒதுக்கீடு சட்டத்தின் படியாக 27 சதமானம் இட ஒதுக்கீட்டைதான் வழங்க முடியும் எனவும், நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவான வகையில் அன்புமணி சார்பில் 27 சதமானம் இடஒதுக்கீடு கோரி வழக்கு தொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாவம் கோ.க.மணி அவர்கள், தமிழ்நாட்டின் போராட்டப் பாரம்பரியத்தை மறந்துவிட்டார். 1950களில்  சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீட்டு கோட்பாடினை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என தீர்ப்பு வழங்கிய போது அதை எதிர்த்துப்போராடி இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டும்  வகையில் அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தினை நிறைவேற்ற வைத்த பெருமை  தமிழகத்திற்கு உண்டு. அத்தகைய பாரம்பரியத்தை மறந்துவிட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக கோரிக்கை வைத்துள்ளோம் என்பது நமது சமூக நீதி பாரம்பரியத்திற்கு விரோதமானது என்பதை விளக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி மக்களின் நியாயங்களை எடுத்துச் சொல்லி நீதிமன்றங்களை ஏற்க வைப்பதுதான்  அரசியல் கட்சிகளின் பணியே தவிர, நீதிமன்றங்கள் ஏற்பதற்கு ஏதுவாக மக்களின் உரிமையை விட்டுக்கொடுப்பதல்ல என்பதையாவது அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

an

 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஒரு பகுதி இடங்களையும், மாநில அரசுகள் மூலம் ஒரு பகுதி இடங்களையும் பெற்று அகில இந்திய ஒதுக்கீடு உருவாக்கப்படுகிறது என்பதை கோ.க.மணி சரியாக விளக்கி உள்ளார். ஆனால் இந்த அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் முழுவதையும் மத்திய அரசே நிர்வகிப்பதாக கூறி குழப்பி உள்ளார், அது உண்மையல்ல. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பணியை மட்டுமே அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொள்கிறது. தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அந்தந்த மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து பயில்கின்றனர்.

உதாரணமாக, தமிழகத்திலிருந்து மத்திய ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்படும் இடங்களில் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். இவர்களுக்கான மருத்துவப் படிப்பு, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இதில் மத்திய அரசோ, மத்திய சுகாதாரத்துறையோ எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவதில்லை.

 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் படி இடஒதுக்கீடு அமலாக்கப்படுகிறது. மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட்டு உருவாக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில்  இருக்கும் இடஒதுக்கீடு கொள்கையே அமலாக்க வேண்டும் என்பதே பொருத்தமாகும். அபயநாத் வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் இதை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும் உச்சநீதிமன்றத்தில் குல்ஷ்ன் பிரகாஷ் எதிர் ஹரியானா அரசு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் பாரா 9-ல் மிகத்தெளிவாக இது விளக்கப்பட்டுள்ளது. அதாவது, அபயநாத் வழக்கில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடானது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என திட்டவட்டமாக தெரிவித்ததோடு, இதை மாநில அரசு இடங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

 

எனவே, மத்திய அரசு மத்திய கல்வி நிறுவனங்களுக்கு பொருத்தமான இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில அரசுகள் ஒதுக்கும் இடங்களுக்கும் பொருத்திடக் கோருவது இந்த தீர்ப்புக்கு விரோதமானதாகும். மேலும் 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலின் 5(4)9(7) விதிகளின் படியும் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் அந்தந்த  மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையை அமலாக்கிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளது. இந்த விதியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் மாநிலங்களுக்கான இடங்கள் என எந்த பாகுபாடும் காட்டப்படவில்லை. இந்த விதி மாநிலங்களில் சேர்க்கப்படும் மாணவர்களுக்குத்தான் பொருந்தும், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு பொருந்தாது என கோ.க.மணி அவர்கள் குறிப்பிட்டிருப்பது பாமகவின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

 

இந்த தவறான வியாக்கியானத்தின் காரணமாகத்தான் பட்டியலின மக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள 18 சதமான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாறாக 15 சதமான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய இட ஒதுக்கீடு சட்டத்தை மாநிலங்கள் வழங்கும் இடங்களுக்கு விஸ்தரித்ததன் விளைவாகும் இது.   இதனை சீர்தூக்கி பார்க்கையில் பாஜக அரசின் வாதங்களை அப்படியே பாமக வாந்தி எடுப்பது கூட்டணி தர்மத்தில் விளைந்த விசுவாசப் போக்கின் விளைவாகும். மேலும் அகில இந்திய தொகுப்புக்கு தமிழ்நாடு மருத்துவப்படிப்புக்கான இடங்களை வழங்கவில்லையெனில் அந்த இட ஒதுக்கீட்டுக்கும் தமிழ்நாடு இடஒதுக்கீட்டின்படி OBC, SC, ST மாணவர்கள் பலன் பெறமுடியும். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்கிவிட்டதாலேயே நமது இடஒதுக்கீட்டு உரிமையையும்  பறிகொடுப்பதற்கு பாமக வக்காலத்து வாங்கி துணைபோவது ஏன்?.

 

மத்திய அரசோ, நீதிமன்றங்களோ அப்படி கட்டாயப்படுத்தினால் அதை எதிர்த்து தமிழக மாணவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதுதானே நியாயம்? இவ்வாறு செய்வது அறியாமை எனக் கூறும் கோ.க.மணி அவர்கள் நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து பாஜகவின் வர்ணாசிரமக் கோட்பாட்டிற்கு காவடி தூக்குவதுதான் அதிபுத்திசாலித்தனம் என்கிறாரா?.

 

நாங்கள் எழுப்பியுள்ள அழுத்தமான கேள்விகளுக்கு முறையான பதில் சொல்ல வழியின்றி கோ.க.மணி அவர்கள் ஆத்திரம் மேலிட அவதூறு புழுதிவாரி தூற்றியுள்ளார். அவருக்கு பதில் சொல்ல முடியும் என்றாலும் இந்த விவாதத்தை திசைதிருப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறோம். கூட்டணிக்காகவோ அல்லது தேர்தல் வெற்றிக்காகவோ கொள்கையற்ற நிலையினை மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் எடுத்ததில்லை என தெரிவித்துக்கொள்கிறோம். ஒருவேளை இதுபற்றி தனியாக  விவாதிக்க வேண்டுமென்றாலும் அதற்கும் எப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராகவே உள்ளது. 

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை குறித்த தீர்ப்பு ஜூலை 27 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழக அரசு வழங்கும் இடங்களில் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிப்படி, தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின்படி ஓபிசி 50 சதம், எஸ்.சி.18 சதம், எஸ்.டி. 1 சதம் என வழங்கிட வேண்டுமென பிரதான அரசியல் கட்சிகள் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் வழக்கறிஞர்கள் தங்களது அறிவார்ந்த வாதங்களையும், ஆதாரங்களையும் எடுத்து வைத்துள்ளனர். இவர்களோடு பாமகவும் சேர்ந்திருந்தால் இந்த குரலுக்கு மேலும் வலுச் சேர்ந்திருக்கும். ஆனால் பாஜகவோடு சேர்ந்து பாமகவும் கூட்டணிக்கச்சேரி நடத்துவது வழக்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதே தமிழக மக்களின் கவலையாகும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.