Skip to main content

“திமுகவுக்கு நம்பிக்கை துரோகம் ஒன்றும் புதிதல்ல!” - இ.பி.எஸ்.

Published on 16/02/2022 | Edited on 16/02/2022

 

"Betrayal of trust is nothing new for DMK!" - E.P.S.

 

திருச்சி மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி  பழனிச்சாமி உரையாற்றினார். அதில் திருச்சி மாநகரம் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற இரவு பகலாக உழைக்க வேண்டும். ஸ்டாலின் நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறார். இதற்கு எல்லாம் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. கலைஞர் முதல்வராக இருந்த போது அம்மாவை தாக்கினார்கள் அப்போது நான் இனி முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் தான் உள்ளே நுழைவேன் என்றார். அதே போல் பதவி ஏற்றார். 

 

இரு பெரும் தலைவர்கள் செய்த சாதனைகளை நாங்கள் எடுத்து கூறி வருகிறோம். நீங்களும் செய்ததை கூறுங்கள். அதை விட்டு விட்டு மிரட்டுவது, பொய் வழக்குகளை போட்டு வருகின்றார்கள். மக்கள் 9 மாதத்திலேயே அதிருப்தியில் உள்ளனர். மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். கூட்டணி இல்லாமல் நிற்க திராணி இல்லாத கட்சி திமுக. தில்லு இருந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கூட்டணி கட்சிகள் இல்லாமல் நின்று பாருங்கள். மக்கள் இடத்தில் இருந்து அவர்கள் கேட்க வேண்டியதை நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்து கேட்கிறோம்.

 

கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டு பிடித்ததே அதிமுக தான். பொய் பேசி தப்பிக்க முடியாது. குற்றவாளிகளுக்கு என்றும் நாங்கள் துணை போக மாட்டோம். காவல் துறை ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையாக இருந்தார்கள் இப்போது ஏவல் துறையாக மாறி உள்ளது. அதிமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு மதிப்பு இருந்தது. காவல்துறையினர் நடுநிலையோடு இருங்கள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் காவல் துறையை வைத்து கொண்டு வழக்கு போடுவது, பிரச்சனை செய்வது என ஈடுபட்டு வருகிறார்கள் திமுகவினர்.

 

படித்தவர்களை கூட ஏமாற்றிய கட்சி திமுக. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வழங்கப்படமாட்டாது என்று நிதி அமைச்சர் தெரிவித்துவிட்டார். நம்பிக்கை துரோகம் என்பது திமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. அரசு ஊழியர்களுக்கு உரிய மரியாதையை அதிமுக தான் கொடுத்து வந்தது.

 

திருச்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் 14 பூங்கா, பல இடங்களில் பாதாள சாக்கடை திட்டம், உய்யகொண்டான் கரைகள் பாதுகாக்க 18 கோடி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முக்கொம்பு புதிய மேலனை, அரசு மகளிர் தோட்ட கல்லூரி இது போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தலின் போது 525 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தனர். இதில் 400 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டது என ஸ்டாலின் கூறுகிறார். 90% நிறைவேற்றப்பட்டது என்று எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். அப்பா 70% என்கிறார், மகன் 90% என்கிறார். 

 

பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைத்து டீசல் குறைக்கவில்லை, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்த பின்னர், இந்தியாவில் 25 மாநில முதலமைச்சர்கள் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்துள்ளனர். ஆனால் திமுக குறைக்கவில்லை. திமுகவை நம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மக்கள் தங்கள் நகையை வைத்து பணத்தை வாங்கி செலவு செய்தனர். ஆனால் 43 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி என்று கூறி விட்டனர். 35 லட்சம் பேர் கட்டும் வட்டியை வாங்கி 13 லட்சம் பேர் வாங்கிய கடனை ரத்து செய்கின்றனர். விஞ்ஞான ரீதியில் ஏமாற்றும் கட்சி திமுக. திமுகவிற்கு ஓட்டு போட்டதற்கு தண்டனை வட்டி கட்ட வேண்டும். அதிமுக அரசு 2500 ரூபாய் கொடுத்தோம், ஆனால் இந்த ஆண்டு 21 பொருள் தருகிறோம் என்றார்கள். தரமற்ற புளி, வெல்லம் தொகுப்பை திமுக வழங்கியுள்ளது. பொங்கல் வரும் போதெல்லாம் ஸ்டாலின் ஞாபகம் தான் வரும்.

 

ஊடகம் மட்டும் தான் இப்போது திமுகவை காப்பாற்றுகின்றது. ஊடகம் கை விட்டால் திமுக ஒன்றுமே இல்லை என்றாகிவிடும். உடற்பயிற்சி, சைக்கிள் பயிற்சி தேவை தான் ஆனால் ஏன் அதை தினமும் ஊடகத்தில் போட வேண்டும்? நீட் குறித்து விவாதிக்க நாங்கள் தயார், நீங்கள் (ஸ்டாலின்) தயாரா? காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது தான் நீட் என்ற நச்சு விதை ஊன்றப்பட்டது. மறு சீராய்வு மனு போட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அதை கேட்காது திமுக, காங்கிரஸ் மனுவை போட்டார்கள்.

 

உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல் என் கையில் உள்ளது. ஆதாரத்துடன் நான் பேசுகிறேன். எனவே திமுகவிற்கு கொஞ்சம் நஞ்சம் உள்ள நன் மதிப்பையும் இழக்க வேண்டாம். 7.5% உள் இட ஒதுக்கீடு மருத்துவ கல்வியில் கொண்டு வந்து அவர்களுக்கு மருத்துவ கல்வி கட்டணமும் இல்லை என்றது அதிமுக தான். திருச்சி மாநகராட்சி மேயர் அதிமுகவை  சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு நமக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் நாம் மறக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தீய சக்தியை நாம் அழிக்க முடியும். 

 

இதில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும், அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளருமான வெல்லமண்டி நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் ப.குமார், முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி, முன்னாள் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், வளர்மதி, கு.ப.கிருஷ்ணன், சிவபதி, டி. ரத்தினவேல், நல்லுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்