Skip to main content

நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிட்டாங்க... பாடம் புகட்ட வேண்டாமா? ஸ்டாலின் பேச்சு

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

 

சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. 
 

முன்னதாக அரவக்குறிச்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,
 

இந்த தேர்தல் ஏன் வந்தது? மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இதே தொகுதியில் நின்று வென்றவர்தான் செந்தில் பாலாஜி. அவர் ஐந்து ஆண்டுகாலம் இந்த தொகுதிக்கு நல்லது செய்யணும் என்று வாக்களித்து வெற்றி பெற வைத்தீர்கள். ஆனால் அவரால் ஐந்து வருடம் பணியாற்ற முடிந்ததா? திருவாரூரில் இடைத்தேர்தல் என்றால் கலைஞர் மறைந்ததால் இடைத்தேர்தல். சூலூரில் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். திருப்பரங்குன்றம் ஆளும் கட்சி உறுப்பினர் மறைந்ததால் இடைத்தேர்தல். ஆனால் இந்த தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல். 18 எம்எல்ஏக்கள் பதவியை பறித்தபோது செந்தில் பாலாஜியின் பதவியையும் சேர்த்து பறித்தார்கள். 
 

aravakurichi by election mk stalin campaign



 

 

18 எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். ஆட்சியை மாற்ற வேண்டுமென்றோ, ஆட்சியை கவிழ்க்க வேண்டுமென்றோ மனு அளிக்கவில்லை. முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை. ஆகையால் அவரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். 
 

தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார்கள். காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். முதலமைச்சர் என்பது பெரிய துறை. எல்லா துறைகளையும் கவனிக்கிறதுதான் முதலமைச்சர் வேலை. காவல்துறையை கையில் வைத்திருப்பார்கள். சில சிறு துறைகளை கையில் வைத்திருப்பார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மட்டுமல்ல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையை வைத்துக்கொண்டார். 
 

ஏனென்றால் எல்லா துறைகளையும்விட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில்தான் அதிகமாக கொள்ளையடிக்க முடியும். ஆகையால் தவறு நடக்கிறது, லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு அளித்தார்கள். இந்த கோரிக்கையை வைத்ததால் இவர்களை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கிவிட்டார்கள். நீங்க தேர்ந்தெடுத்த எம்எல்ஏவை நீக்கினார்கள் என்றால், அப்படி நீக்கியவர்களுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டாமா? 


 

 

நான்கு தொகுதியில் ஏற்கனவே முதல்கட்ட பிரச்சாரத்தை முடித்தேன். இரண்டாம் கட்ட பிரச்சார்த்தை இங்கு முடிக்கிறேன். நான் அறிந்தவரையில் நான்கு தொகுதியில் இந்த தொகுதியில்தான் செந்தில் பாலாஜிதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு இந்த நான்கு தொகுதிதான் பயன்படப்போகிறது. ஏற்கனவே 115 நாம் வந்துவிட்டோம். ஆகையால் இதுவும் சேர்ந்துவிடும். இவ்வாறு பேசினார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.