Skip to main content

'முன் மொழிந்த ராஜ்நாத் சிங்; வழி மொழிந்த அமித்ஷா' - கைதட்டி வரவேற்ற ஓபிஎஸ்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
nda alliance MP meeting in delhi

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோடி வந்திருந்த பொழுது எம்பிக்கள் அனைவரும் 'மோடி... மோடி...' என முழுக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தனது வாழ்க்கையை நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளார் மோடி. அனைவருக்கும் அனைத்தும் என்ற நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை மோடி வழங்கி உள்ளார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணி நிபந்தனையில் உருவான கூட்டணி இல்லை அர்ப்பணிப்பில் உருவான கூட்டணி. என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. அறுபது ஆண்டுகள் கழித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளோம். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்'' என்றார்.

மோடியின் பெயரை உச்சரித்ததும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் எம்பிக்கள் 'மோடி... மோடி..' என முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 'பிரதமர் மோடியின் பத்தாண்டுகள் ஆட்சியில் மகத்தான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி' எனப் புகழாரம் சூட்டி பேசினார்.

தமிழகத்தில் இருந்து என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டு எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுழன்று அடிக்கும் நீட் முறைகேடு; மோடிக்கு மம்தா எழுதிய திடீர் கடிதம்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
neet scam; Sudden letter written by Mamata to Modi

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபேத்குமார் சிங்கை நீக்கி புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமிக்கப்பட்டார். நுழைவுத் தேர்வில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உயர்மட்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய 63 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நேற்று தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுத்துள்ளது. பீகாரில் உள்ள தேர்வு மையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்ட நிலையில் இந்தத் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. 1563 மாணவர்கள் நீட் தேர்வில் பெற்ற கருணை மதிப்பெண் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் நீட் மறுதேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 813 பேர் நீட் மறுதேர்வு எழுதி உள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

neet scam; Sudden letter written by Mamata to Modi

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகளால் ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், 'மாணவர்கள் நலனை மனதில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாநில அரசுகளுக்கு இதற்கான தேர்வுகளை நடத்துவதற்கான அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் நம்பிக்கைக்கு இது மிகவும் அவசியம். தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது.  நீட் தேர்வு நடைமுறை வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே  பயனடையச் செய்யும் வகையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களவை சபாநாயகர் பதவி?; சந்திரபாபு நாயுடு கூறிய முக்கிய தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Important information given by Chandrababu Naidu for Lok Sabha Speaker post?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது. 

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்,  பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகத் தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று (24-06-24) தொடங்கிய மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். அதேவேளையில் மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கான தங்களில் நிலைப்பாடு என்ன என்பதைத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடன் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார்.

ஆனால், அதற்கு நான் தெலுங்கு தேசம் கட்சிக்குச் சபாநாயகர் பதவி தேவையில்லை, அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல உதவிகளைச் செய்யுமாறும் கூறினேன். ஆந்திரா மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதனால், மேலும் பதவி கேட்டால் மாநில நலன் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்” என்று கூறினார். முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.