Skip to main content

கோடிக்கணக்கில் தங்கக் கடத்தல்... கேரள அரசைச் சூழும் சர்ச்சைகள்... நடந்தது என்ன..?

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

kerala gold smuggling issue update

 

கேரள முதல்வரின் முதன்மைச் செயலராக இருந்த எம். சிவசங்கரிடம் 30 கிலோ தங்கக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது, கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகப் பெயரைப் பயன்படுத்தி அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசியத் தகவல் கிடைத்தது. பொதுவாகத் தூதரகத்திற்கு வரும் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்யமாட்டார்கள். ஆனால், இந்தத் தகவலை அடுத்து கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தூதரகத்துக்கு வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலை, அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 30 கிலோ தங்கம் இருந்துள்ளது. தூதரகத்தின் பெயரில் இவ்வளவு பெரிய தங்கக் கடத்தல் நடைபெற்றது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான விசாரணை முடக்கிவிடப்பட்டது.

 

இந்நிலையில் விசாரணையின் போது, தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அமீரக நாட்டுத் தூதரகத்தில் பணியாற்றியிருந்த ஸ்வப்னா, அங்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்தி இதனைச் செய்துவந்துள்ளதாகச் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, இதுதொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தங்கக் கடத்தலில் தொடர்புடைய ஸ்வப்னாவுக்கு கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளர் வேலை கிடைத்தது எப்படி? என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தகவல் தொடர்புத் துறைச் செயலராகவும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலராகவும் இருந்த சிவசங்கருடன் ஸ்வப்னா தொடர்பிலிருந்துள்ளதாகக் கண்டறியப்பட்டது.

 

இதனையடுத்து சிவசங்கரிடம் 30 கிலோ தங்கக்கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தைக் கருத்தில்கொண்டு முதன்மைச் செயலர் எம்.சிவசங்கரன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவருக்குப் பதிலாக மீர் முகமது அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தங்கக் கடத்தலில் முதல்வர் அலுவலகத்திற்குத் தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்